இந்தியா- சீனா எல்லை வன்முறை சம்பவத்துக்கு பிறகு இருநாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் சென்றிருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவிட்டு, திடீரென இந்தியாவுக்கு நேற்று (மார்ச் 24) வருகை தந்தார்.
இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின்போது, இந்தியா - சீனா இடையே ராணுவ ஒப்பந்தம், எல்லை விவகாரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு, உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல இந்தாண்டு பெய்ஜிங்கில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை வாங் யீ அழைக்க உள்ளதாகவும், இதுகுறித்து அவரை சந்திக்க நேரம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தாக கண்டனங்கள் எழுந்தன.
முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வருவது குறித்து எங்களுக்கு தகவல் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ?