புதுச்சேரி மாநில எதிர்க்கட்சி தலைவரும் திமுக தெற்கு அமைப்பாளருமான சட்டப்பேரவை உறுப்பினர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகள் பாஜக அரசால் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளை பாதிக்கச் செய்யும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை இப்போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளிலும், புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை, சங்கராபரணி ஆற்றுப்படுகை, கடல் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
இதற்காக டெண்டர் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் வேளாண் நிலங்கள் சேதமாகும், அத்திட்டத்தில் இயற்கை வாயுவை எடுக்க பூமிக்கடியில் வெடி வைத்து தகர்ப்பதால் நில அதிர்வு ஏற்படும், கடல் நீர் உட்புகும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், கடலில் மீன் வளம் குறையும்.
ஆனாலும் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பு உள்ள திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்து, விரைந்து செயல்படுத்தவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்ததுடன், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.