தமிழ்நாடு

tamil nadu

SC on Manipur violence: அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றம் எடுக்கும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

By

Published : Jul 20, 2023, 1:50 PM IST

Updated : Jul 20, 2023, 3:15 PM IST

மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

D Y Chandrachud
D Y Chandrachud

டெல்லி: மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ நேற்று வெளியாகி வைரலான நிலையில், அந்த வீடியோ குறித்து உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 20) தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது வீடியோ குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இது மிகவும் கவலையளிக்கிறது. அதில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றம் தலையிடும்” என தெரிவித்து உள்ளார்.

மேலும், அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறிய தலைமை நீதிபதி, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும், “கலவரங்களில் பெண்களை ஆயுதமாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது மிகவும் கவலையளிக்கிறது. இது மனித உரிமை மீறல்களில் மிகப் பெரியது. நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு சிறிது அவகாசம் கொடுங்கள். இல்லையெனில் நாங்கள் (நீதிமன்றம்) நடவடிக்கை எடுப்போம்.

நேற்று வெளியான வீடியோ மே மாதத்தின் வீடியோ. இது நேற்றைய வீடியோவாக இருக்க வேண்டியதில்லை” என்று தலைமை நீதிபதி கூறினார். இது குறித்து நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம், குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மே மாதம் முதல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது மீண்டும் நடக்காமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.

மேலும், உலகம் முழுவதும் வரலாற்றில் வன்முறை சம்பவங்களில் பெண்களை பகடை காயாகப் பயன்படுத்துவதை அரசியலமைப்பு ஜனநாயகத்தில் ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மணிப்பூரில் இனக்கலவரம் தொடர்பான மனுக்களுடன் இந்த விஷயத்தையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை குறித்து நேற்று முதல் ஊடகங்களில் வெளிவந்த காட்சிகளால் நீதிமன்றம் மிகவும் வருத்தமடைந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

அரசியல் சாசன ஜனநாயகத்தில் பெண்களை வன்முறையில் ஈடுபடும் கருவியாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும் மத்திய, மாநில அரசுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் கவலையை அரசு பகிர்ந்து கொள்கிறது என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். மேலும் இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Manipur violence: மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம் - பிரதமர் மோடி கண்டனம்!

Last Updated : Jul 20, 2023, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details