சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கான்வாய் போராட்டக்காரர்களால் 20 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்ததாகக் கூறிய பிரதமர் மோடி பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்தார்.
இதனால் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்ததாக பஞ்சாப் அரசின் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து மோடியின் ஃபிரோஸ்பூர் பேரணி குறித்து, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இது ஒரு ஆர்ப்பாட்டம், பாதுகாப்பு குறைபாடுடன் ஒப்பிடுவது தவறு. ஜனநாயகத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அதனால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாஜக தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளில் பேசி மக்களுடனான எங்களது உறவுகளை கெடுக்க முயற்சிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் இருக்கக்கூடாது.
அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நேற்று(ஜன.5) நடந்த எதையும் பாதுகாப்பு குறைபாடு என கூற முடியாது. நாங்கள் பிரதமரிடம் வானிலை சரியில்லாததால் சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க முடியுமா? அதைத் தள்ளிப்போடுங்கள் என கூறினோம். இருந்தும் அவர் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார்.