தமிழ்நாடு

tamil nadu

52 நாட்கள் சிறைக்குப் பின் விடுதலை! சிறை, வீடு என சந்திரபாபு நாயுடுக்கு உற்சாக வரவேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 12:55 PM IST

Chandrababu Naidu reaches home: ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று (நவ.1) காலை உண்டவல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Chandrababu Naidu reaches home
சிறைக்குப் பின் வீட்டிற்கு வந்த சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆந்திர சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ரூ.300 கோடி முறைகேடு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மற்றும் வீட்டு காவலில் வைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தரப்பில், 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாக கூறி வலது கண்ணில் சிகிச்கை அளிக்க வேண்டி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (அக். 31) சந்திரபாபு நாயுடுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியும், வரும் நவம்பர் 24ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் சரணடைய உத்தரவிட்டும், மருத்துவமனையில் கண் சம்பந்தமான சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தியும், வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது உள்பட பல நிபந்தனைகளை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுக்கு தெலுங்கு தேச கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், உண்டவல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று (நவ. 1) காலை சந்திரபாபு வந்தடைந்தார். அப்போது அவர் வருகைக்காக கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வீட்டின் முன் காத்திருந்தனர்.

கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "நான் கஷ்டத்தில் இருந்த போது நீங்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானா மற்றும் பிற மாநில மக்களிடமும் நான் பெற்ற அன்பை என்னால் மறக்க முடியாது. தனது 45 ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் எந்த தவறையும் செய்யவில்லை.

தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் என்னை தவறு செய்ய விட மாட்டார்கள். எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி" என்றார். முன்னதாக, தெலுங்கு தேச கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டு உள்ள அறிக்கையில், "சந்திரபாபு நாயுடுவை குற்றவாளி என நிருபிக்கும் முயற்சியில் ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details