தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

One Nation, One Election: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு! - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

One Nation One Election
One Nation One Election

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 2:25 PM IST

டெல்லி: ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்ட முழக்கங்களை மத்திய பாஜக அரசு எழுப்பி வருகிறது. ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை - ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இதையடுத்து, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும், தேர்தல் செலவுகளும் அதிகரிக்கின்றன என்றும் தெரிவித்தார். மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுவதால் நேரம் வீணடிக்கப்படுகிறது, அதனால் ஒரே வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது காலத்தின் தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் - ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்" என்ற விவாதத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்றும், இது தொடர்பான வெவ்வேறு கருத்துக்கள் வெளிவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சூழலில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான், சத்­தீஸ்கர், தெலங்­கானா, மிசோ­ரம் ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளி­லும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், இதில் முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளதாகவும் நேற்று (ஆகஸ்ட் 31) மத்திய அரசு அறிவித்தது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காகவே மத்திய பாஜக அரசு இந்த சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. நாட்டில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிகிறது. இந்த அறிக்கையின்பேரில் அடுத்தகட்டமாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாது" - டிகேஎஸ் இளங்கோவன்!

ABOUT THE AUTHOR

...view details