டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் ஜனவரி 22ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (ஜனவரி 18) தெரிவித்துள்ளார். இதன் படி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அலுவலகங்கள் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அயோத்தி ராம் கோயில் கும்பாபிஷேகத்தில் பல அரசு ஊழியர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் மதியம் 2.30 மணி வரை மூடப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அன்று அரை நாள் விடுமுறை" என கூறப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்விற்காக சில மாநிலங்கள் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.