ஜெட்டா : ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெறும் உள்நாட்டு போரால் ஸ்தம்பித்து காணப்படும் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷ் காவேரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த நேரத்தில் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் புறப்பட்டு ஜெட்டா வந்தடைந்தனர். மேலும் இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் மூலம் 250 இந்தியர்கள் இரண்டாவது கட்டமாக மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆபரேஷ் காவேரி திட்டத்தின் மூலம் இதுவரை 530 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சூடானில் நடைபெறும் உள்நாட்டு போரில் சிக்கி ஏறத்தாழ 3 ஆயிரம் இந்தியர்கள் அவதியுற்று வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.