தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக ஆளுநர் பெயரில் முகநூல் பக்கம் தொடங்கிய ஹேக்கர்ஸ்.. நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 8:45 PM IST

கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பெயரில் மர்ம நபர்களால் போலி முகநூல்(facebook) கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல் துறையிடம் ஆளுநர் மற்றும் அவரின் சிறப்புச் செயலாளர் புகார் அளித்துள்ளனர்.

ஆளுநர் பெயரில் முகநூல் பக்கம் தொடங்கிய ஹேக்கர்ஸ்
ஆளுநர் பெயரில் முகநூல் பக்கம் தொடங்கிய ஹேக்கர்ஸ்

பெங்களூரு:இணைய வழி மோசடிகளில் ஈடுபடும் போலி முகநூல் கணக்குகளால் எந்த விவரமும் இல்லாத சாமானியர்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், உயரிய பொறுப்புகள் வகிக்கும் தலைவர்களும் பாதிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநரின் கணக்கு போன்று ஹேக்கர்களால் போலியாகக் கணக்கு ஒன்று முகநூலில் உருவாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக மாநிலத்தின் 13-வது ஆளுநராக தாவர் சந்த் கெலாட் பொறுப்பேற்றார். இந்நிலையில் சமீபத்தில், மர்ம நபர்களால் இவரின் பெயரில் முகநூல் (facebook) பக்கத்தில் கணக்கு தொடரப்பட்டு, இவரது புகைப்படங்கள் மற்றும் சில கருத்துக்களும் பகிரப்பட்டு வந்தது.

இதனை அறிந்த ஆளுநர் தாவர் சந்த், இந்த கணக்கைக் கூடுதல் சிறப்புச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பொய்யான கணக்கினால் ஆளுநரின் புகைப்படம் மற்றும் கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்பட வாய்ப்புள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்புச் செயலாளர் மற்றும் ஆளுநர், சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இது குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சைபர் கிரைம் காவல் துறை.

முன்னதாக இதே போன்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) பேரில் முகநூலில் போலியான கணக்கு துவங்கப்பட்டிருந்தது குறித்து KPCC சட்டத்துறையின் செயற்குழு உறுப்பினரான ஷதாபிஷ் சிவண்ணா கடந்த பிப்ரவரி மாதம் சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், KPCC குறித்து அவதூறு பரப்பும் வகையில், சிலர் சமூகநீதி பாதிக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்துக் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் பின்னால் இயங்கும் மோசடி கும்பலை பகிரங்கப்படுத்த வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெங்கடேஷ், தரணேஷ் மற்றும் சித்தார்த் ஆகியோர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து மூவரையும் சைபர் கிரைம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதையும் படிங்க:"திடீர் கூட்டம்; காரணம் தெரியாத மோடி" - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details