டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று (டிச.8) வெளியிடப்பட்ட நிலையில், 5 மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாகின. உத்தரப்பிரதேச மாநில மயின்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் ஷக்யாவை தோற்கடித்தார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாம் சிங் யாதவ் மறைந்ததையடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் டிம்பிள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 322 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக ஆளும் மாநிலமான உ.பி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி - ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கூட்டணி அதன் வெற்றியை நிரூபித்துள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ்வதி கட்சியும் போட்டியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாக கருதப்படும் அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்விகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி மற்றும் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரியா லோக் தளம் ஆகியவைகளுக்கு மெயின்புரி நாடாளுமன்றம் மற்றும் ராம்பூர் மற்றும் கட்டௌலி சட்டமன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் முக்கியமானதாக கருதப்பட்டது.
பிகாரில் பாஜக வெற்றி: பிகாரின் குர்ஹானி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கேதார் பிரசாத் குப்தா அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜேடி(யு)வின் மனோஜ் சிங் குஷ்வாஹாவை 3 ஆயிரத்து 645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னதாக பதவியில் இருந்த ஆர்ஜேடி எம்எல்ஏ அனில் குமார் சஹானி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
கட்டெளலியில் ராஷ்டிரிய லோக் தளம் வெற்றி: எஸ்பி(சமாஜ்வாதி கட்சி) கூட்டணியான ராஷ்டிரிய லோக் தளம் சார்பாக கட்டெளலி இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மதன் பையா அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி சாயினியை 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மதன் பையா 97 ஆயிரத்து 71 வாக்குகளும், சாயினி 74,996 வாக்குகளும் பெற்றனர்.
சாயினி பாஜக முன்னாள் எம்எல்ஏ விக்ரம் சிங்கின் மனைவி ஆவார். அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த முசாபர்நகர் கலவர வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து மாநில சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.