சில நாள்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி ரகு ராம கிருஷ்ண ராஜூ, கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தார். மூன்று தலைநகர், அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி உள்ளிட்ட கட்சியின் முடிவுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார்.
இதையடுத்து அவர் கட்சியின் கொள்கைகளை மீறியதாகக் கூறி, அதற்கு விளக்கம் கேட்டு கட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மேலும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரான விஜய்சாய் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும், ராஜூவை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தனர்.