தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2020, 1:31 PM IST

ETV Bharat / bharat

இறுதிச்சடங்கு செய்ய முன்வராத உறவினர்கள்: கணவரின் சடலத்துடன் ஒரு நாளைக் கழித்த மனைவி!

பெங்களூரு: கரோனா அச்சத்தின் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், உயிரிழந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சடலம்
சடலம்

இந்தியாவில் தினந்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபக்கம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. ஆனால் மக்களிடையே கரோனா குறித்த அச்சம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பிற நோய்களால் உயிரிழக்கும் உறவினர்களின் இறுதிச்சடங்குக்குக்கூட செல்ல யாரும் முன்வருவதில்லை. சில இடங்களில் தன்னார்வலர்களே முன்னின்று இறுதிச்சடங்கை நடத்திவிடுகின்றனர்.

ஆனால், கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள ராங்கோலி ஹல்லாவைச் சேர்ந்த அன்னப்பாவுக்கு அந்த உதவி கிடைக்கப்பெறவில்லை. சிறிய வீட்டில் குறைந்த வருமானத்தோடு வாழ்ந்து வந்த அன்னப்பா கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அன்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அன்னப்பாவின் மனைவி பர்வதம்மா உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால், கரோனா அச்சத்தின் காரணமாக அன்னப்பாவிற்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.

ஏழ்மையின் பிடியில் இருக்கும் அன்னப்பாவின் மனைவி பர்வதம்மா, தனி ஆளாக தனது கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய வழியில்லாமல் தவித்துள்ளார். இதனால் தனது கணவரின் சடலத்துடன் சுமாராக 24 மணி நேரம் இருந்துள்ளார். இதனிடையே, கிக்கேரி என்ற கிராமத்திலிருந்து இவர்களுடைய உறவினரில் ஒருவர் மட்டும் வந்து அன்னப்பாவைப் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.

நேரம் ஆக ஆக அன்னப்பாவின் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கவே, அக்கம் பக்கத்தினர் அன்னப்பா வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அடக்கம் செய்யப்படாமல் கிடந்த அவருடைய உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்து சுகாதாரத் துறைக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் அன்னப்பாவின் உடலை அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட 94 வயது பாட்டி!

ABOUT THE AUTHOR

...view details