தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்குக்கு கரோனா கட்டுப்படுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்

By

Published : Mar 25, 2020, 12:52 PM IST

Updated : Mar 25, 2020, 1:16 PM IST

ஜெனீவா: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது சீனாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO
WHO

இத்தாலியில் ஒவ்வொரு நாளும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளைவிட குறைவாக பதிவாகிவருவது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதை மட்டும் வைத்துக்கொண்டு வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது என்று கூற முடியாது என்று தெரிவித்த அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வரும்காலங்களில் நிலவும் சூழ்நிலையை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், "பல ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வருவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

அமெரிக்காவில் தற்போது மிக வேகமாக கோவிட்-19 வைரஸ் தொற்று பரவிவருகிறது. இருப்பினும் இப்போது வைரஸை கண்டறிய நடைபெறும் சோதனைகளும் சுகாதாரத் தறை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் பரவலை ஒரே செயல் திட்டம் மூலம் அனைத்து நாடுகளிலும் கட்டுப்படுத்த முடியாது. இருந்தாலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது சீனாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவியது.

கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட வழக்குகளில் 85 விழுக்காடு வழக்குகள் ஐரோப்பியாவிலும், அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளன. இதன் மூலம் வைரஸ் பரவல் இவ்விரு பகுதிகளில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 39,827 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இதுவரை 16,231 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இத்தாலியில் கரோனா பாதிப்பால் ஒரேநாளில் 743 பேர் உயிரிழப்பு

Last Updated : Mar 25, 2020, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details