உத்தரப் பிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள நெத்தநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சின்னார் யாதவ். அவரது மனைவி விம்லா (35).
கடந்த சில நாள்களாக தனது மனைவி விம்லாவின் நடத்தையில் சின்னார் யாதவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அடிக்கடி வெளியே செல்லக் கூடாது, யாருடனும் பேசக்கூடாது என்று அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை இருவருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது சின்னார் யாதவ், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த விம்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த விம்லாவின் தலையை வெட்டி, கையில் எடுத்துக்கொண்டு பாபெரு காவல் நிலையத்தை நோக்கி ஏறத்தாழ 3 கிமீ தூரத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
சரணடைய காவல் நிலையத்தை நோக்கி வந்த அவரைக் கண்ட காவலர்கள், அவரிடமிருந்த தலையைக் கைப்பற்றி கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விம்லாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடத்தையில் ஐயமுற்று மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்து வந்துள்ளார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திர பிரதாப் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மனைவியின் தலையை வெட்டி கையோடு எடுத்துக்கொண்டு சாலையில் நடந்துசெல்லும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.