கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர்.
பெருந்தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முறையான நோய்த்தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்பார்த்த அளவு இல்லை என்றபோதிலும் மற்ற சிகிச்சைகளை ஒப்பிட்டால் பிளாஸ்மா சிகிச்சை முறை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பிளாஸ்மா சிகிச்சையில், பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்படும் ரத்தம் நோயாளிகளின் உடலில் செலுத்தப்படுகிறது. குணமடைந்தவர்களில் எத்தனை பேர் ரத்தத்தை தானம் செய்ய முன்வருகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுவரும் லலித்யா என்பவர் ஆன்டிபாடிகளைக் கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து கட்டுரையை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் வசித்துவருகிறார். பிரபல பாடகர் கந்தசாலா வெங்கடேஸ்வர ராவின் பேத்தியான அவரிடம் ஈநாடு பத்திரிகை பேட்டி கண்டுள்ளது.
ஜனவரி 20 முதல் மார்ச் 25வரையிலான காலகட்டத்தில், சீனாவில் உள்ள ஷேன் சென் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஐந்து நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஆன்டிபாடிகளை கொடுத்துள்ளனர். அதில், சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய மூவர் பூரண குணமடைந்துள்ளனர்.