தமிழ்நாடு

tamil nadu

வரலாறு நெடுக தொடரும் அறிவியல் மறுப்பென்னும் மாபெரும் தொற்று நோய்!

By

Published : May 5, 2020, 8:43 PM IST

ஹைதராபாத்: ஒரு பெருந்தொற்று உலகையே சூறையாடிவரும் வேளையில், மற்றுமொரு தொற்று நோய் வரலாறு நெடுகிலும் விடாமல் தொடர்ந்து வருகிற அவலம் இன்றளவும் தொடர்கிறது. அறிவியல் மறுப்பென்னும் சாபக்கேடுதான் அந்தப் பெரு வியாதி. மதத் தலைவர்கள் முதல், நாட்டை ஆள்வோர் வரை இதனால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

Kaveree Bamzai  The Other Pandemic by Kaveree Bamzai  Pandemic  வரலாறு நெடுக தொடரும் அறிவியல் மறுப்பென்னும் மாபெரும் தொற்று நோய்  அறிவியல் மறுப்பு, டொனால்ட் ட்ரம்ப், கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று
Kaveree Bamzai The Other Pandemic by Kaveree Bamzai Pandemic வரலாறு நெடுக தொடரும் அறிவியல் மறுப்பென்னும் மாபெரும் தொற்று நோய் அறிவியல் மறுப்பு, டொனால்ட் ட்ரம்ப், கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று

கட்டுரையாளர் காவேரி பம்சாய் ’இந்தியா டுடே’ இதழின் முன்னாள் ஆசிரியர். ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆகிய நாளேடுகளில் பணியாற்றியதுடன், இங்கிலாந்து நாட்டின் ’ச்சீவினிங்’ ஸ்காலர்ஷிப் பெற்றவர். ‘பாலிவுட் இன்று’ என்ற புத்தகத்தையும், இந்திய திரைவானில் பெண்கள் என்ற தலைப்பில் இரண்டு நெடும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) மகளிர் முன்னேற்றத்திற்கான அமைப்பின் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு ஊடக மற்றும் தொழில்துறை அரங்குகளில் உரையாற்றி வருபவர்.

அறிவியல் வெறுப்பு என்னும் அவலம்: கலிலியோ முதல் ட்ரம்ப் வரை

ஒரு பெருந்தொற்று உலகையே சூறையாடிவரும் வேளையில், மற்றுமொரு தொற்று நோய் வரலாறு நெடுகிலும் விடாமல் தொடர்ந்து வருகிற அவலம் இன்றளவும் தொடர்கிறது. அறிவியல் மறுப்பென்னும் சாபக்கேடுதான் அந்தப் பெரு வியாதி. மதத் தலைவர்கள் முதல், நாட்டை ஆள்வோர் வரை இதனால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் இணைந்துள்ள இன்றைய தலைவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிருமி நாசினியை நேரடியாக ஊசி மூலம் கரோனா நோயாளிகளுக்குச் செலுத்தினால் வைரஸை ஒழித்துவிடலாமே என்று அண்மையில் அவர் தெரிவித்த கருத்து பலரின் புருவங்களை உயர்த்தியது.

அறிவியலில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய அமெரிக்க நாட்டின் அதிபர் அல்லவா! இந்த பொன்னான கருத்தை தெரிவித்ததன் மூலம், அறிவியல் மறுப்பாளர்களின் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். இவ்வாறு விஞ்ஞானத்தை மறுதலிப்பவர்களின் வரலாறு நீண்டு நெடியது, நவீன அறிவியலின் தந்தையான கலிலியோ-வின் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

சூரியனும் பிற கோள்களும் பூமியை சுற்றிவரவில்லை, மாறாக பூமியும் ஏனைய கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று கண்டறிந்தார். இந்த சூரிய மையக் கோட்பாடு, பைபிளில் கூறப்படுவதற்கு எதிராக உள்ளது என்று குற்றம் சுமத்தி, அன்றைய ரோமன் கத்தோலிக்க திருச்சபை கலிலியோ-வை சிறையில் அடைத்தது. கலிலியோ-வின் வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்தாற் போல உணர்த்துவது ஒன்றே: ‘கருத்து சுதந்திரம்’, என்று கூறுகிறார் இஸ்ரேலி-அமெரிக்க வான்-இயற்பியல் பேராசிரியர் மரியோ லிவியோ.

“இன்று, பல அரசுகளின் அறிவியலுக்கு நேரெதிரான போக்கு, உலகில் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையே எழும் தேவையற்ற முரண்கள், இலக்கியத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள பிளவு அதிகரித்து வரும் சூழலில், கலிலியோ-வின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கருத்துச் சுதந்திரத்தின் இன்றியாமையை அது வலியுறுத்துகிறது,” என்று, ‘கலிலியோவும் அறிவியல் மறுப்பாளர்களும்’ என்ற தமது புதிய நூலில் அவர் தெரிவிக்கிறார்.

ஜைர் போல்சானரோ

சாக்கடையில் குதித்தாலும் கவலையில்லை: பிரேசிலின் போல்சானரோ:

கரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவும் இந்த வேளையிலும், அறிவியல் மறுப்பு என்னும் பெருந்தொற்றும் அதற்கு இணையாக கட்டுக்கடங்காமல் உள்ளது கவலை தருவதாகும். இந்நிலையில், பிரேசில் நாட்டு அதிபர் ஜைர் போல்சானரோ, தான் அமெரிக்காவின் ட்ரம்ப்-க்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என நிறுவிவருகிறார்.

டொனால்ட் ட்ரம்ப்

கரோனா ஒரு உலகப் பெருந்தொற்று எல்லாம் அல்ல, அது மிகைப்படுத்தப்பட்ட மிக சாதாரன ‘ஃப்ளூ’ மற்றும் ’சளி’ தொல்லைதான், என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். மேலும், கழிவு நீர் சாக்கடையிலேயே குதித்து எழுந்தாலும் பிரேசிலியர்களுக்கு எந்த வித தொற்றும் வராது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் முன்னமே பெற்றுள்ளதால், அவர்களை அண்டவே அண்டாது, என்றார்.

இதற்கு முன்னர், காடுகள் அழிவதை எடுத்துக் கூறிய தமது நாட்டின் விண்வெளி அமைப்பின் தலைவரை ’பொய் சொல்வதாக’ குற்றம் சுமத்தி பதவி நீக்கம் செய்தார். வெப்பமண்டல நாடுகளின் ட்ரம்ப் என்று போல்சானரோ அழைக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை.

அறியாமையின் மயக்கம்: இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள நிலைமை நம்பிக்கை தருவதாக இல்லை. அங்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனா வைரஸ் பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே, ஐந்து முக்கிய அமைச்சரவை கூட்டங்களைத் தவிர்த்துவிட்டார். புவி வெப்பமயமாதல் குறித்து, அவரது ஐயப்பாடுகள் வெளிப்படையாக தெரியும் நிலையில், இந்த பெருந்தொற்று தொடர்பான அவரது அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

போரிஸ் ஜான்சன்

புவி வெப்பமயமாதல் ஆதாரபூர்வமற்ற ஒன்று என்னும் நிலைப்பாடு உடையவர் அவர். ஜான்சனின் 2019 தேர்தல் பரப்புரைக்கு, பருவநிலை மாற்றத்தை மறுக்கும் குழுக்கள் பெருமளவு நிதியை அள்ளிக் கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, பிரதமராக அவரது செயல்பாடு வேறு எப்படி இருக்கமுடியும்? இந்த வரிசையில் அடுத்து வருவது கம்போடிய பிரதமர் – தென்கிழக்காசிய நாட்டின் முடிசூடா மன்னன் – ஹுன் சென் மற்றும் மெக்ஸிக்கோ அதிபர் ஆந்த்ரே ஓப்ரடார்.

1990-கள் முதல் பிரதமராக உள்ள ஹுன் சென் கரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்க, கம்போடிய மக்கள் முகக்கவசம் அணிவதை கேலிசெய்கிறார். இதற்கும் மேலே சென்று, பாலியல் ஒழுக்கம் போதிக்கிறார் மெக்ஸிக்கோ அதிபர். அவரது ’உறுதியான அறவொழுக்கம்’ பெருந்தொற்று தாக்காமல் காக்கும் என்று மார்தட்டுகிறார் அவர்.

கலிலியோ: நம் தலைமுறைக்கு ஒரு பாடம்

இத்தகைய பகுத்தறிவு மறுப்பு வரலாற்றில் ஒன்றும் புதியதல்ல, கலிலியோ (1564-1642) காலத்திலேயே வந்துவிட்டது, என்று தமது நூலில் கூறுகிறார் லிவியோ. “இன்று நாம் சந்தித்துவரும் அறிவியலுக்கு எதிரான வெறுப்பும் பகைமையும், கலிலியோ எதிர்கொண்டு போராடிய அதே சிந்தனைப் போக்கும் உலவியல் களமும்தான்.

புனித நூலுக்கு விளக்கம் அளிப்பதில் இருந்து அறிவியலை வேறுபடுத்த அவர் மேற்கொண்ட தளரா முயற்சிகளும், இயற்கையின் விதிகளை, ஒரு கருத்தை நிறுவும் காரணத்துடன் முன் முடிவுகளோடு அணுகாமல், ஆய்வு முடிவுகள் தரும் அடிப்படையில் உறுதிசெய்வதும்,” அவர் காட்டிய வழி.

இதில் அவர் ஒரு முன்னோடி. காரணம், மனித இனம் தனது எதிர்காலத்தை மட்டுமின்றி பூவுலகின் தலைவிதியையும் தானே தீர்மானிக்க, அதற்கான பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டுப்பாட்டை, அறிவியல் நமக்கு அளிக்கிறது என்ற கருத்தாக்கம் வருவது கலிலியோவிடம் இருந்துதான், என்று விளக்குகிறார் லிவியோ.

பழைமைவாதத்தின் புதிய பரிணாம வளர்ச்சி: இந்தியாவில் அறிவியல் மறுப்பின் அரசியல்

அறிவியல் மறுப்பு தொற்றுவியாதிக்கு இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன! உலகம் முழுக்க வியாபித்து இருக்கும் இந்த அரசியல் போக்கை ’பெருந்தொற்று மறுப்பு’ என்று அழைக்கிறார் அறிவியல் எழுத்தாளரான மார்க் ஹூஃப்னகுல். அவரது பார்வையில், மறுப்பாளர்கள் ஐந்து வகையான தந்திரோபாயங்களைக் கையாளுகிறார்கள்.

சதி, விருப்பத் தேர்வு (வசதிக்கு ஏற்ற நிலைப்பாடு), போலி அறிஞர்கள், மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பு (எல்லையை மாற்றிக்கொண்டே இருத்தல்) ஆகியவையே இவர்களின் தந்திரம். பருவநிலை மாற்றம், பரிணாம வளர்ச்சி, ஹெச்ஐவி/எய்ட்ஸ் என அனைத்திற்கும் அவர்கள் இதே நடைமுறையை கையாளுவதைக் காணலாம்.

இந்தியாவில், ஒரு முன்னாள் அமைச்சர், அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்ட சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை குப்பை என்று திருவாய் மலர்ந்துள்ளார். தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஆன்மிக சாமியார் ஹெச்ஐவி/எய்ட்ஸ்-ஐ யோகாசனம் மூலம் குணப்படுத்தலாம் என்கிறார்.

யோகா

இன்னும் ஒருபடி மேலே சென்று, அஸ்ஸாம் மாநில ஆளும் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர், கோமியம் கரோனாவைப் போக்க ஆகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக, உலகமே ஊரடங்கில் முடங்கியிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த பெருந்தொற்றுக்குச் சற்றும் குறையாத ஆபத்தானது அரைவேக்காட்டு ”தகவல் பெருந்தொற்று”. இது மிகவும் கவலை தரும் விஷயம், என்று எச்சரிக்கிறார் மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் அர்னாப் பட்டாச்சார்யா.

மாடுகள்

பாதிப்பில்லாத ஆனால் எடுத்த எடுப்பிலேயே தவறான தகவல் முதல் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது வரையிலான தகவல் பரிமாற்றம், வைரஸை-விட அதிவேகமாக தொலைக்காட்சி, வாட்ஸ்-அப், ட்விட்டர் மூலம் பரவுகிறது என தகவல் பெருந்தொற்றை மேலும் விளக்குகிறார் அவர்.

“இவற்றுடன், திகைப்பூட்டும் அறிக்கைகள் வெளியிடும் அடி முட்டள்களான டொனால்ட் ட்ரம்ப் போன்றோரும் நம்மிடையே இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. கிருமிநாசினிகளை நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தலாம் என்பது போன்ற வெட்கக்கேடான கருத்தைக் கூறிவிட்டு, அவற்றைக் கடந்து செல்லக்கூடிய நிலை, அச்சமூட்டும் அறிவியல் மறுப்பு கலாசாரம் நவீன உலகில் எந்த அளவு வேறோடியுள்ளது என்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை

அது அமெரிக்காவாக இருந்தாலும், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதை அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே பொறித்துள்ளதாகப் பெருமை கொள்ளும் இந்தியா என்றாலும், நிலைமை இதுதான். மேலும், பருவநிலை மாற்றம் முதல், மரபணு மாற்ற பயிர்கள் வரையிலும், ஹோமியோபதியில் நம்பிக்கை முதல் அதிசய குணமடைதல் என அறிவியல் மறுப்பு பூமியெங்கும் பெருந்தொற்றாகப் பரவி வருகிறது,” என்று கவலை தெரிவிக்கிறார் அவர்.

புள்ளிவிபரங்களையும் தரவுகளையும் தேவைக்கு ஏற்ப கையாள்வது எளிது, ஒன்றோடொன்றைத் தொடர்புபடுத்துவதும் காரண காரியத்தை வசதிக்கேற்ப வளைப்பதும் எளிதுதான். ஆனால், அதிகாரத்தின்முன் பயபக்தியுடன் கைகட்டி நிற்பதும் ”மூத்தவர்களுக்கு” எதிர்பேச்சு பேசாமல் வாய்மூடி கட்டுப்படுவதும் ஊறிப்போன நமது கலாசாரத்தில் இத்தகைய பேச்சுக்கு எதிர்வினையாற்றுவது கடினமானது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும். பள்ளிகளில் கூட ‘’ஏன்”? என்று கேள்வி கேட்க நாம் ஊக்கப்படுத்தப்படுவது இல்லை.

நமது கல்வி முறையின் லட்சனம் இதுதான். இதனாலேயே, அறிவியல் என்பது பள்ளித் தேர்வுகள் முடிந்தவுடன் மறந்துபோகும் துரதிருஷ்டமான பாடமாக இருக்கும் அவலம் தொடர்கிறது. அன்றாட வாழ்வில் இந்த பருண்மையான உலகை புரிந்துகொண்டு வாழ வேண்டிய கருவியாக அறிவியல் இல்லை.

இதனால்தான், உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் ப்ரெஷ்ட் தனது மிகச்சிறந்த படைப்பான ‘கலிலியோவின் வாழ்க்கை’ என்ற நாடகத்தில் இவ்வாறு கூறுகிறார்: “சிந்திப்பதே மனித இனத்திற்குக் கிடைத்துள்ள மிகப்பெரும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.”

கவைக்கு உதவாத பழம்பெருமை

நமது நாட்டில், அறிவியலை நீர்த்துப்போகச் செய்யும் கவைக்கு உதவாத பழம்பெருமை பேசுதல் புத்துயிர் பெறுவது கவலையளிக்கிறது. பண்டைய காலத்திலேயே ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்தவர்கள், பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்று கடந்த காலத்திற்கு கற்பனாவாதப் பெருமையைக் கட்டமைப்பதில் இந்தியர்கள் திரும்பியுள்ளனர்.

ஆனால், நாம் உண்மையாக கொண்டாட வேண்டியது சாதனைகள் சுய சார்புடன் செயற்கைக்கோள்கள் அனுப்புவதையும், சில அத்தியாவசியமான உயிர்காக்கும் மருந்துகளை மிகக் குறைந்த விலைக்கு சாத்தியப்படுத்தியதுமே ஆகும்.

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாட்டின் அதிகாரம் மிக்க தலைவருக்கு அறிவியல் மீதான நம்பிக்கையின்மையின் விளைவு இதுதான்: நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் மையத்திற்கான (CDCP) 2018-க்கான பட்ஜெட்டை 15 பில்லியன் அமெரிக்க டாலராக அதிரடியாக குறைத்ததும், உலக நோய்த்தடுப்புக்கான தனது பங்களிப்பை 80 சதவீதம் குறைத்ததும் தான்.

ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் உலகின் பிற தலைவர்களும் இந்த கோவிட்-முட்டாள்தனத்தால் பீடிக்கப்படாமல், வரலாற்றில் தொடரும் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதே இன்றியமையாதது.

இதையும் படிங்க: கரோனாவை சமாளிக்க தயாராகிறதா தடுப்பூசி? ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குனர் பிரத்யேக பேட்டி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details