உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் முதல் உள்நாட்டு கரோனா வைரஸ் தடுப்பூசியை, ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசிக்கு “கோவேக்ஸின்” என பெயரிடப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியின் முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இரண்டாம் கட்ட சோதனைக்கு உள்வாங்கப்படவுள்ள அந்த தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுத்துவரும் பணிகள் மற்றும் பாதிப்பு நிலவரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 9) விவாதிக்கப்பட்டது.