தலைவர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு கோயில் கட்டுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால், அமெரிக்க அதிபருக்கு தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் கோயில் கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புசா கிருஷ்ணா. இவர், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கோயில் கட்டி அதில் ஆறு அடி சிலையை வைத்து வழிபட்டுவருகிறார்.
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் ட்ரம்பை சந்திக்க மத்திய அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய-அமெரிக்க உறவு வலுப்பெற வேண்டும். ட்ரம்ப் நெடுங்காலம் வாழ்வதற்காக அனைத்து வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு மேற்கொள்கிறேன். அவருக்காகப் பிரார்த்தனை செய்த பின்புதான் எனது வேலையைத் தொடங்குகிறேன்" என்றார்.