உலக நாடுகளின் கண் முன் நிற்கும் சவாலாக கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று உள்ளது. இந்த வைரஸின் ஆதி மூலமான சீன நாடு, அதனைப் பரவ விடாமல் தடுக்க திணறி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 1,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் உள்ள முக்கிய நகரமான வூஹானில்தான் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் சுகாதார அவசர நிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது, அனைத்து நாடுகளையும் கலக்கமடையச் செய்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன. குறிப்பாக, இவ்விவகாரத்தில் இந்தியா துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் தான் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவுக்குள் நுழைய முக்கிய வழி என்று உணர்ந்த மத்திய அரசு, சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளிடம் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கிறது.
இது தவிர, சீனாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள், வேலை நிமிர்த்தமாக அங்கு வசிப்பவர்கள் என, அனைத்து இந்தியர்களையும் மீட்கும் பணியையும், இந்தியா மறக்கவில்லை. அதே சமயம், சுற்றுலாவாக இந்தியா வந்த சீனப் பயணிகளையும், அவர்களின் நாட்டுக்கும் இந்தியா திருப்பி அனுப்பி வருகிறது.
உலகத்திலேயே கொரோனா வைரஸ் தாக்கம் மிக மிகத் தீவிரமாக இருக்கும் சீனாவின் வூஹான் நகர் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வந்த 645 இந்தியர்களையும், 7 மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட இந்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவரான புலின் குப்தா, நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், தாங்கள் எவ்வாறு இந்தியர்களை சீனாவிலிருந்து மீட்டோம் என்பது குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய குப்தா, ”வூஹான் நகரத்திலிருக்கும் இந்தியர்களை மீட்க, பயணம் செய்வதற்கு நான்கு நாள்களுக்கு (ஜனவரி 27ஆம் தேதி) முன்னர்தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மருத்துவ மாணவர்கள், வேலை செய்பவர்கள், சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்கள் என அனைவரையும் மீட்டுமாறு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, 36 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், ஜனவரி 31ஆம் தேதி இந்தியாவிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். ஆரம்பத்தில் 200 பேரை மீட்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர், 350க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு வர வேண்டும் எனத் தகவல் அளிக்கப்பட்டது.