தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 8:45 PM IST

ETV Bharat / bharat

“பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல் ஈடுபடும்வரை பிரச்னையில் தீர்வை எட்ட முடியாது” - ரவ்னீத் சிங் எம்.பி.,

டெல்லி : போராடும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்திய கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஈடுபடும்வரை பிரச்னையில் தீர்வை எட்ட முடியாது என லூதியானா காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

லூதியானா காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு
லூதியானா காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 12 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே ஐந்தாவது முறையாக சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று ஊடகங்களிடையே பேசிய லூதியானா காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு,”ஜனநாயக விரோதமாக வழக்கத்திற்கு மாறாக விவாதமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும். விவசாயிகளால் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு மத்திய செவிசாய்க்க வேண்டும்.

இந்த சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்னர் மத்திய அரசு விவசாயிகளுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக இந்த விவகாரத்தை அரசு விவாதித்திருக்க முடியும். அதை அப்போதெல்லாம் செய்யாமல், இப்போது விவசாயிகளிடம் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்கச் சொல்கிறார்கள்.

போராடும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பில்லியனர் தொழிலதிபர்களான அம்பானி, அதானி ஆகியோருடன் நெருக்கமான உறவில் இருக்கும் மத்திய கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஈடுபடும்வரை பிரச்னையில் தீர்வை எட்ட முடியாது.

விவசாயிகள் தங்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோருகிறார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேளாண் சட்டங்கள் தங்களுக்கோ அல்லது இந்த நாட்டின் வளர்ச்சிக்கோ உதவப்போவதில்லை என்பதை விவசாயிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த விவசாய சட்டங்கள் இந்தியாவில் விவசாயத் துறையை பாதிக்கும் என்று அவர்கள் கூறுவதை நாம் மறுக்க முடியாது. விவசாயிகளின் போராட்டம் என்பது உள்நாட்டு விஷயம், அதை விரைவில் அரசு விரைவில் சரிசெய்ய வேண்டும்” என்றார்.

லூதியானா காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு

முன்னதாக சத்தீஸ்கரைச் சேர்ந்த கே.டி.எஸ் துளசி, ஹரியானாவைச் சேர்ந்த தீபேந்திர சிங் ஹூடா, டாக்டர் அமர் சிங், பிரீனீத் கவுர், மனீஷ் திவார், பஞ்சாபைச் சேர்ந்த குர்ஜீத் சிங் ஆஜ்லா உள்ளிட்டோரும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :குடியரசுத்தலைவருடன் சரத் பவார் சந்திப்பு: வேளாண் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை

ABOUT THE AUTHOR

...view details