தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பாக டெல்லியில் சமய மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பெரும்பான்மையானோர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பலர் மீது வழக்குப்பதிவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லி காவல் துறையினர் தப்லீக் ஜமாத் வழக்கு தொடர்பாக 83 வெளிநாட்டினர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 700 பேரின் ஆவணங்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர். இதில் பாஸ்போர்ட் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் நிஜாமுதீனில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.