தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் 19: தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவமும் அவசியமும்! - சமூக நீதி

கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையான தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் பற்றி இந்தியப் பொதுச் சுகாதாரக் கழகத்தின் பேராசிரியர் எழுதிய தொகுப்பு...

Social distancing and its Importance
Social distancing and its Importance

By

Published : Mar 24, 2020, 5:58 PM IST

இயற்கையில் மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறார் தத்துவவாதி அரிஸ்டாட்டில். எனவே தனிமைப்படுத்துதல் என்பது நம் இயற்கை விதிக்கு எதிரானது. கோவிட்-19 தொற்று விரைவாகப் பரவிவரும் இந்தச் சூழலில் தனிமைப்படுத்துதலை நமது வாழ்விடம், வருமானம் உள்ளிட்ட காரணிகள் சவாலானதாக மாற்றுகிறது.

எனினும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்துதலும், கைகளைச் சுத்தமாக கழுவுதலுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக உள்ளன. அதிலும் தனிமைப்படுத்துதல் மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வரலாற்றுத் தரவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (காய்ச்சல்) தீவிரமாக இருந்தபோது தனிமைப்படுத்துதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. இதையே கோவிட்-19 தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு நாடுகளும் பரிந்துரைக்கின்றன.

தனிமைப்படுத்துதல் என்றால் என்ன?

தனிமைப்படுத்துதல் என்பது உடல்ரீதியாக சக மனிதனை விட்டு விலகியிருப்பது. சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல் (social distance) என்பது சமூக தொடர்புகளை முறித்துக் கொள்ளுதல் அல்லது சமூக அந்தஸ்து பார்த்து ஒடுக்குதல் எனும் அர்த்தத்தைக் குறிப்பிடும் தவறான சொல்லாக பார்க்கப்படுகிறது. இதனால் உலக சுகாதார மையம் இதனை உடல்ரீதியாக விலகியிருத்தல் (physical distancing) எனும் சொல்லால் குறிப்பிடுகிறது. எனினும் தனிமைப்படுத்துதல் என்ற வார்த்தையே பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

Social distancing and its Importance

தனிமைப்படுத்துதல் எப்படி பின்பற்றப்படுகிறது?

மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பெருந்தொற்று காலங்களில் தனிமைப்படுத்துதல் பின்பற்றப்படுகிறது. மக்களை வீட்டில் இருக்க வேண்டும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், உடல்ரீதியாக சக மனிதனிடமிருந்து 3 முதல் 6 அடி விலகி இருக்க வேண்டும் என்பது தனிமைப்படுத்துதலின் முக்கிய அம்சங்கள் ஆகும். பெரும்பான்மையான அரசுகள் இதன் காரணமாக போக்குவரத்து, பொது இடங்களில் கூடுவதற்காக தடை விதிக்கும். அதேபோல் மக்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் தனிமைப்படுத்துதலை ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலை அமைத்துத் தரும்.

தனிமைப்படுத்துதல் எவ்வாறு உதவுகிறது?

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கிறது. கோவிட்-19 தொற்று வளர்ச்சி அடையும் வேகத்தைக் குறைக்கிறது. இந்தியா தற்போது கோவிட்-19 வளர்ச்சி நிலையின் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்தச் சூழலில் நாம் பாதிப்பைக் கண்டறிய முடியும். ஆனால் மூன்றாம் நிலையை அடைந்துவிட்டால், தனிமைப்படுத்திக் கொண்டாலும் கோவிட்-19 வளர்ச்சியைக் கண்டறிவது கடினம். அது அதிகமானவர்களுக்கு பரவியிருக்கும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகரித்துவிடும்.

தனிமைப்படுத்துதல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதன்மூலம் சுகாதார மையங்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறைகிறது. இது சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்துப் போராட பெரும் உதவியாக இருக்கும்.

இந்தச் சூழ்நிலையில் நாம் மனதை தைரியமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தலில் இருந்தாலும் தொழில்நுட்ப உதவியின் மூலம் நாம் தொடர்பில் இருக்க முடியும். வீடியோ கால் செய்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருக்கலாம். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களைத் தொடர்பு கொண்டு பேசி அவர்களை ஆற்றுப்படுத்துவது அவசியமானது.

சமூக நலன்

கோவிட்-19 தொற்று பரவிவரும் இதுபோன்ற சூழலில், பிற்போக்குத்தனமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். சாதி, மதம் கடந்து மனிதத்தை உணர வேண்டும். நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டால்தான் பிறரைப் பாதுகாக்க முடியும்.

தனிமைப்படுத்துதலில் சமூக விதிமுறைகளை மாற்றியமைப்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. கைகளைக் குலுக்குதல், கட்டி அணைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, வணக்கம் வைப்பது, சலாம் சொல்வது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

சமூகநீதி

எந்த ஒரு சமூக மற்றும் பொது நலன் சார்ந்த விஷயமும் சமூகநீதிக் கொள்கைகளின் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் அது வெற்றிபெற முடியும், நிலைத்து நிற்க முடியும். சமூக நீதி என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பொதுவான நன்மைகளைப் பிரித்தளித்தல் மற்றும் பொதுவான துயரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் குழுக்களுக்குப் பாரபட்சமின்றி அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தச் சூழலில் ஏழை மக்களின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவியோடு, பொருளாதார உதவியும் மிக அவசியமானது. இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுவரும் சூழலில், பெருநிறுவனங்கள் அரசாங்கத்தின் முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு நிதி உதவியளிப்பதன் மூலம் சானிடைசர்கள், மருந்துகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க பெரும் உதவியாக இருக்கும்.

சமூக விஞ்ஞானிகள் மக்கள் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும். இந்தியாவின் பொதுநலனை வலுப்படுத்த அவர்களது பங்கு முக்கியமானதாகும்.

நந்தா கிஷோர் கன்னுரி - இந்திய பொது சுகாதாரக் கழகம், ஹைதராபாத்

ABOUT THE AUTHOR

...view details