புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால், பயணிகள் சிரமம் அடைந்து வருவதாகவும், அதிகளவிலான கூட்டம் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அகற்றுமாறு சமந்தப்பட்ட அலுவலர்களுக்கும், மத்திய அரசிற்கும் அறிவுறுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று நீதிபதிகள் அமர்வு:
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய அரசு, மற்ற பங்குதாரர்களை கொண்ட ஒரு குழுவை உருவாக்க உத்தேசித்துள்ளதாக நேற்று (டிசம்பர் 16) தெரிவித்தது.
தேசிய பிரச்னை:
விவசாயிகளின் பிரச்னை விரைவில் ஒரு "தேசிய பிரச்னையாக" மாறும் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு, பிற பங்குதாரர்கள், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டது.