குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரால் தாக்கல்செய்யப்பட்ட 140-க்கும் மேற்பட்ட மனுக்களின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முன்னிலையான வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கபில் சிபில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்வரை அச்சட்டத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு தலைமை நீதிபதி, இடைக்காலத் தடைவிதிப்பதற்கான அவசியம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். பின்பு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க எத்தனை காலம் தேவைப்படும் என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.