தமிழ்நாடு

tamil nadu

சர்ஜில் இமாம் வழக்கு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது!

டெல்லி : ஜே.என்.யூ. மாணவர் சர்ஜில் இமாம் மீது டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

By

Published : Aug 14, 2020, 4:28 PM IST

Published : Aug 14, 2020, 4:28 PM IST

சர்ஜில் இமாம் வழக்கு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது!
சர்ஜில் இமாம் வழக்கு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வந்த ஜே.என்.யூ. மாணவர் சர்ஜில் இமாம், போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக டெல்லி, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனித்தனியாக அவர் மீது குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் சர்ஜில் இமாம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு கடந்த முறை வந்தபோது, "இந்த மனு மீது டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. சர்ஜில் இமாம் சார்பாக ஆஜராகிய சித்தார டேவ், ''சர்ஜில் இமாமின் இரண்டு உரைகளை வைத்து டெல்லி, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளன. சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டது போல இந்த வழக்கையும் ஒரே மனுவாக மாற்றி விசாரிக்க வேண்டும்" என வாதாடினார்.

அப்போது அரசு சார்பாக ஆஜாராகிய அரசு தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா கால அவகாசம் கோரினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதும், ஜனவரி 16ஆம் தேதி அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அஸ்ஸாம் தனிநாடாக அறிவிப்பதைத் தவிற வேறு வழியில்லை என்ற தொனியில் பேசியதாக காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டம் ஒரு பாசிச ஆவணம் என்று அவர் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ(தேச துரோகம்), 153(ஏ)(பகைமை ஊக்குவித்தல்), 153 (பி)(ஒருமைப்பாடுக்கு குந்தகம் விளைவிப்பது), 505 (வதந்தி பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழும் உபாச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details