தமிழ்நாடு

tamil nadu

ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துமாறு முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் விரைந்து செயல்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய நீர் வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம் எழுதியுள்ளார்.

By

Published : Jun 4, 2020, 11:08 PM IST

Published : Jun 4, 2020, 11:08 PM IST

jal jeavan
jal jeavan

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளின் மூலம் பாதுகாப்பான தண்ணீரை வழங்கி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் படும் துயரம் முடிவுக்கு வரும்.

வீட்டுக் குழாய் இணைப்புகள் எண்ணிக்கையின் அடிப்படையிலும், மத்திய, மாநில பங்களிப்பில் இருந்து பயன்படுத்தப்பட்ட நிதியின் அடிப்படையிலும் இந்திய அரசு நிதியை வழங்கும். குழாய் இணைப்புகளைக் கொடுப்பதற்காக 373 கோடியே 87 லட்சத்து ரூபாய் தமிழ்நாட்டிற்கு 2019-20ஆம் ஆண்டில் வழங்கப்படும்.

தற்போது வரை 373 கோடியே 10 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மார்ச் மாத இறுதியில், 114 கோடியே 58 லடசம் ரூபாய் மட்டுமே ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநிலத்தால் பயன்படுத்த முடிந்தது.

குறிப்பாக, 917 கோடியே 44 லட்சம் ரூபாய் 2020-21ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி எஞ்சியுள்ள 264 கோடியே 9 லட்சம் ரூபாயைச் சேர்த்து, ஆயிரத்து 181 கோடியே 53 லட்சம் ரூபாய் உறுதிப்படுத்தப்பட்ட மத்திய அரசின் நிதி தமிழ்நாட்டிடம் இருக்கிறது.

இதன்மூலம் நிதிப் பொறுப்பு மற்றும் நிதி நிலை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடன் வாங்கும் அளவு 3.5 விழுக்காட்டிலிருந்து, 5 விழுக்காடாக மத்திய நிதியுடன் சேர்த்து, அதற்கு இணையான மாநிலத்தின் பங்குத் திட்டத்தை சரியான தருணத்தில் வழங்கப்படும். எனவே, மாநிலத்தின் பங்குத் தொகையும் சேர்த்து, குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு 2020-21ஆம் ஆண்டில் மாநிலத்திடம் மொத்த நிதியாக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் இருக்க வேண்டும்.

இதனைக் கொண்டு, 13 கோடியே 86 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை ஒப்பிட்டால், குறைவான வீடுகளுக்கே 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

குறிப்பாக, 105 லட்சம் செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்க மாநிலத்தில் வாய்ப்பிருப்பதால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டங்களையும் ஆய்வுசெய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1 கோடியே 27 லட்சத்து கிராமப்புற வீடுகளில், 21 கோடியே 85 லட்சம் வீடுகள் தண்ணீர் இணைப்புகளை ஏற்கனவே பெற்றுள்ளன. 34 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு இந்த ஆண்டு குழாய் தண்ணீர் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் கீழ் உள்ள அனைத்து 117 கிராமங்களுக்கும், முன்னேறும் முனைப்புடன் உள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் உள்ள 90 விழுக்காடு கிராமங்களுக்கும் 100 விழுக்காடு இணைப்புகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

78 விழுக்காடு குழாய் இணைப்புகள் உள்ள சிவகங்கை, 61 விழுக்காடு இணைப்புகள் உள்ள வேலூர், 58 விழுக்காடு இணைப்புகள் உள்ள புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டில் 100 விழுக்காடு இணைப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தை ஒரு உண்மையான மக்கள் இயக்கமாக மாற்ற அனைத்துக் கிராமங்களிலும் தகவல் அளித்தல், கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்பு பரப்புரை (IEC) மூலம் சமுதாய ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஜல் ஜீவன் திட்டம் குறித்த திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் பற்றி முதலமைச்சர், மாநிலத்தின் நிதியமைச்சருடன் காணொலி மூலம் விரைவில் விவாதிக்கத் தயாராக உள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முன்பு 'சமோசா'... இப்போ 'குஜராத் கிச்சடி' கலக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details