பாஜகவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ரஃபேல் விவகாரம் உள்ளிட்டவைகளை கையில் எடுத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. குறிப்பாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரப்புரையை மேற்கொண்டார். அவரது தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரம் செலுத்தும் திட்டம், ஜிஎஸ்டி எளிமையாக்கப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி என குறிப்பிட்டிருந்தார். இளம் வாக்காளர்களை கவரும் வகையில், கல்லூரிகளுக்கு சென்று நாட்டு நடப்புகளை எடுத்துரைத்து, அவர்களது கேள்விக்கும் பதிலளித்தார்.
'மேலும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற குற்றச்சாட்டுகளை, களையும் வகையில் இந்த முறை அமேதி மட்டுமின்றி, தென் இந்தியாவின் பிரதிநிதியாக வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். பாஜகவுக்கு எதிராக வகுத்த வியூகம் சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே 'மோடி திருடன்' என்று சொன்னதாக கூறி ராகுல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதற்காக உச்ச நீதிமன்றத்திலும் அவர் இருமுறை மன்னிப்பு கேட்க நேர்ந்தது. இது அவரது செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தவிர ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6 ஆயிரம் பணம் செலுத்துவதாக அறிவித்த திட்டமும் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மோடிக்கு எதிராக அலை வீசியதாக கூறப்பட்ட நிலையில், அதை சரியாக அறுவடை செய்வதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அவர் ஒழுங்குபடுத்த தவறிவிட்டதும் தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.