கிழக்கு லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவிற்குச் சொந்தமான 1,200 கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது தொகுதியான வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "எல்லையில் நிலவும் பதட்டங்களில் மக்கள் கவனம் குவிவதை பிரதமர் மோடி விரும்பவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் 'சீனா' என்ற வார்த்தை பயன்படுத்தியதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் எல்லை பிரச்னையில் மக்களின் கவனம் இருக்ககூடாது என பிரதமர் விரும்புகிறார். நம்முடைய நிலத்தில் இருந்து சீனா ஆக்கிரமிப்புகளையும், துருப்புகளையும் எப்போது அகற்றப்போகிறீர்கள்? இதைவிட பெரிய பிரச்னை எதுவும் இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்களா? பாரத மாதாவின் (இந்தியா) நிலத்தை சீனா ஆக்கிரமித்தது குறித்து பிரதமர் பேசாதது விசித்திரமாக இருக்கிறது" என்றார்.