ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சரிசெய்ய மதுபானத்திற்கு கரோனா வரி விதிக்க, பல மாநில அரசுகள் முடிவு செய்தன. இதன் காரணமாக, மக்கள் விலை குறைவான மதுபானங்கள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பினர். அச்சமயத்தில் தான், போலி மதுபானங்கள், கள்ளச்சாராயம் குறைவான விலையில் புழக்கத்தில் வரத் தொடங்கியுள்ளன. அத்தகைய போலியான மதுபானத்தைக் குடித்த பலருக்கு உடல்நிலை மோசமாகி உயிரிழப்பு ஏற்படத் தொடங்கியது. இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலகட்டத்தில் மட்டுமே சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக 270 வழக்குப்பதிவுகளும், கடத்தல்காரர்கள் 301 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மதுபானக் கும்பலைத் தடுக்க காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை ஒன்றும் இரண்டு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படையின் அதிரடி சோதனையால் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில், மதுபானம் தயாரிக்கப் பயன்படும் இரண்டு லட்சம் லிட்டருக்கும் அதிகமான மஹுவா லஹான்; 1,612 லிட்டர் கள்ளச்சாராயம் ; 4,606 லிட்டர் ஒயின்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் போலியான மதுபானம் தயாரித்தல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட 6 காவலர்கள், 7 கலால் அலுவலர்கள், வரிவிதிப்பு அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 37 நபர்கள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலருக்குத் தொடர்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து பேசிய டிஜிபி டிங்கர் குப்தா,"கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோகாவைச் சேர்ந்த ரவீந்தர் சிங் ஆனந்த் மெக்கானிக்கல் ஜாக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் லூதியானா தொழிலதிபரிடமிருந்து ரூ.11,000 ரூபாய்க்கு 200 லிட்டர் அளவு கொண்ட தலா 3 சாராய கேன்களை வாங்கியுள்ளார். பின்னர், அந்த சாராய கேன்களை அதிக விலைக்குப் பலருக்கும் விற்பனை செய்துள்ளார். இத்தகைய வழியில் தான் போலி மதுபானங்கள் மாநிலம் முழுவதும் எளிதாக பரவத் தொடங்கியுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோபிந்தர், ரவீந்தர், தர்ஷனா ராணி, திரிவேணி,சவுஹான், ஹர்பிரீத் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு முக்கிய மாஃபியா கும்பல் உறுப்பினர்களுடனான தொடர்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
போலி மதுபானத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.