புதுச்சேரி அருகே ஏம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேல் (45). புதுச்சேரி மாநிலத்தில் நித்யானந்தாவின் தலைமை ஆசிரமம் அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த நித்யானந்தாவின் தீவிர பக்தரான இவர், நித்யானந்தா பெயரில் ஏம்பலம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார்.
இதனிடையே நேற்று முன்தின இரவு செம்பியப்பாளையத்திலிருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு தனது காரில் திரும்பியவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரின் கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவரது கைப்பேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த வஜ்ரவேலுவின் மனைவி வள்ளியம்மாள் மங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், காவல் துறையினர் வஜ்ரவேலுவைத் தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று பாகூர் பகுதியில் வஜ்ரவேலு காரில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வஜ்ரவேல்
தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற காவல் துறையினர் வஜ்ரவேலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே வஜ்ரவேலு பணம் கொண்டு சென்றதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரைக் கடத்தி கொலை செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். புதுச்சேரியில் நித்யானந்தாவின் நெருங்கிய பக்தர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’