உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த உயிர் கொல்லி நோய் இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற உலக நாடுகளை மிரட்டிவிட்டு தற்போது இந்தியாவில் ஊடுருவியுள்ளது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் புதுச்சேரி அரசு, இந்த நோயை தடுக்கும் விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள், சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை சார்பாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் கூட்டம் மிகுந்த பகுதிகளில், பொது மக்களுக்கு கொரோனா குறித்து விழப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டுவருகின்றன.