புதுச்சேரியில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகக்கூறி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தின் முன்பு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இன்று (செப். 03) சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தின் முகப்புக் கதவை மூடி அலுவலக வாசலில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பரவலைக் கட்டுபடுத்த சுகாதாரத் துறை தவறிவிட்டது என்றும், கரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் படுக்கைகளை அரசு அதிகரிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், கரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதை படிப்படியாக அரசு குறைத்து வருவதாகவும், பரிசோதனை முடிவுகளை தாமதமாக அளித்து வருகிறது என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றும் புகார்களை அடுக்கடுக்காகக் கூறினர். ஒட்டுமொத்தமாக புதுச்சேரி சுகாதாரத் துறையின் செயல்பாடு மெத்தனமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தர்ணாவில் ஈடுப்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.