தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 9:43 PM IST

ETV Bharat / bharat

சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்குக் கரோனா தொற்று உறுதி

மும்பை: பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவிஞரும் செயற்பாட்டாளருமான வரவர ராவுக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரவர ராவ்
வரவர ராவ்

மகாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகான் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவலகா, வெர்னான் கோன்சால்வ்ஸ் உள்ளிட்ட 11 போ் மீது, அம்மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னா், அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 22 மாதங்களாக சிறையில் இருக்கும் வரவர ராவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, வயது மூப்பு, உடல் நிலை, கரோனா பரவும் அபாயம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பிணை கேட்டு, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், 81 வயதான ராவ் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்துதர வேண்டும் எனவும் அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் வரவர ராவ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 2017, டிசம்பர் 31ஆம் தேதி, எல்கர் பரிஷத் அமைப்பு சார்பாக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக வரவர ராவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணம் இவர்களின் பேச்சுதான் எனவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கைதானவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடுபவர்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: முடிவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியாது!

ABOUT THE AUTHOR

...view details