மனிதர்கள், விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட 27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்வதாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த மே 14ஆம் தேதி வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த முடிவுக்குக் கருத்து தெரிவிக்க 45 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திராம், கேப்பன், டெல்டாமெத்ரின் கார்பென்திஸிம், மலாதியோன், குளோரோஃபைரிபோஸ் உள்ளிட்ட 27 பூச்சிக்கொல்லிகள் இதில் அடக்கம். இதுதவிர, டிடிவிபி அல்லது டைகுளோர்வோஸ் என்று அழைக்கப்படும் வேதிப்பொருளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியோடு தடை செய்யப்படுகிறது.
இதில் பெரும்பான்மையானவை மிகுந்த நச்சுத்தன்மை கொண்டதாலும், இதற்கு மாற்றாக உயிரி பூச்சிக்கொல்லிகள் இருப்பதாலும் நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியப் பொருளாதாரம், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே அரசு இவ்வாறு செய்துள்ளது. இந்த ஆணையை தேனீ வளர்ப்பாளர்கள், இயற்கை விவசாயிகள், நறுமணப் பொருள் தயாரிப்புத் துறையினர் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், இதனை நாம் விதை உற்பத்தித் துறையினரின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தடைசெய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை, விவசாயிகள் பயிர்கள் மீது பயன்படுத்தி வரும் வேளையில், மறுபக்கம் விதை உற்பத்தி நிறுவனங்கள் விதைகளை நேர்த்தி செய்ய இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன.
சோளம், கம்பு, சூரியகாந்தி, கடுகு, காய்கறிகளின் விதைகளைப் பாதுகாக்க டெல்டாமெத்ரின் பயன்படுகிறது. மற்ற பூச்சிக்கொல்லிகளுடன் ஒப்பிடுகையில் மலிவாகக் கிடைக்கும் இதனைப் பல்லாண்டுகளாக விதை உற்பத்தித் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
திராமை எடுத்துக்கொண்டால் அது புஞ்சைக்கொல்லியாகப் பயன்படுகிறது. நெல், பருப்பு விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களளுக்கு திராம் மிகவும் முக்கியமானது. அதிக விலையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை இந்த நிறுவனங்கள் வாங்க முடியாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கு லாபமே கிடைக்காது. தடைசெய்யப்படும் பூச்சிக்கொல்லிகள் அந்நிறுவனங்களின் செலவைக் கணிசமாகக் குறைக்கவல்லது.