நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வெங்காயம் கிலோவுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அரசின் தவறான கொள்கைகளே வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
விண்ணைப் பிளக்கும் வெங்காய விலை: மத்திய அரசை விமர்சிக்கும் சரத்பவார்!
மும்பை: விண்ணைப் பிளக்கும் அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்வதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார்.
நாஷிக்கில் வெங்காய விற்பனையாளர்களிடையே பேசிய அவர், "வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து விரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். வெங்காயத்தை எந்தளவுக்கு இருப்பு வைக்க வேண்டும் என்பது குறித்தும் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகளிடம் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். எனவே ஏலத்தை உடனடியாக தொடங்க வேண்டும்" என்றார்.