தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முத்தலாக் தடை சட்டம் - ஓர் ஆண்டு நிறைவு!

ஹைதராபாத்: இஸ்லாமியப் பெண்களை பாதுகாக்கும் விதமாக முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

triple Talaq
triple Talaq

By

Published : Aug 1, 2020, 5:38 PM IST

இஸ்லாமியப் பெண்களை பாதுகாக்கும் விதமாக முத்தாலக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முத்தலாக் அளிப்பது கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நீண்ட காலமாகவே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்துவந்தது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. முத்தலாக் தடை சட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும், இந்து சமூக ஆண்கள் தங்களின் மனைவியை உடனடி விவாகரத்து செய்தால் அது சிவில் குற்றமாக கருதப்படும் போது, இஸ்லாமிய சமூக ஆண்கள் முத்தலாக் அளித்தால் மட்டும் அது கிரிமினல் குற்றமாக கருதப்படுவது, பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கை என்று ஒரு தரப்பினர் விமர்சித்தனர்.

இதனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த சட்டத்தை எதிர்த்தார்கள். மசோதாவில் திருத்தம் கொண்டு வர தேர்வுக் குழுவுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் அனைத்து கோரிக்கையும் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

முத்தலாக் கடந்துவந்த பாதை...

அக்டோபர் 16, 2015: முத்தலாக் முறையில் இஸ்லாமிய பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா என்பதை ஆராய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்றம் அமர்வு ஒன்று கேட்டுக் கொண்டது.

பிப்ரவரி 5, 2016: முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை ஆராய அரசு தலைமை நீதிபதியான முகுல் ரோஹத்கியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

மார்ச் 28, 2016: முத்தலாக் முறை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அக்டோபர் 7, 2016: இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் முறையை மத்திய அரசு எதிர்த்தது.

பிப்ரவரி 14, 2017: முத்தலாக் பற்றிய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 16, 2017: ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முத்தலாக் பற்றி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மார்ச் 30, 2017: இந்த வழக்கு மிகவும் முக்கியமானவை, உணர்வு பூர்வமானவை எனக் கூறி, இந்த வழக்கு குறித்த விசாரணை மே 11ஆம் தேதி தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

மே 11, 2017: முத்தலாக் முறை இஸ்லாமிய மதத்தின் அடிப்படையா என்பதைப் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

மே 12, 2017: முத்தலாக் முறை மிகவும் மோசமானது என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

மே 15, 2017: இஸ்லாமிய சமூகத்தில் உள்ள திருமண முறைகளை ஒழுங்குபடுத்தப் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மே 16, 2017: 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தலாக் முறை மத நம்பிக்கை சார்ந்தது. இதில் அரசியலமைப்பு தலையிட முடியாது என இஸ்லாமிய அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

மே 17, 2017: முத்தலாக் முறை இஸ்லாமிய மத அடிப்படையில் உருவானதல்ல, பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்கள் இடையேயான விவகாரம் அல்ல, பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மே 18, 2017: முத்தலாக் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஆகஸ்ட் 22, 2017: ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வில், மூன்று நீதிபதிகள் முத்தலாக் முறை இஸ்லாம் மதத்திற்கு எதிரானது, சட்ட விரோதமானது எனக் கூறி, ஆறு மாதத்திற்குள் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

டிசம்பர் 17, 2018: முத்தலாக் சட்ட திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மக்களவையில் அறிமுகம் செய்தார்.

டிசம்பர் 31, 2018: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு, மசோதாவில் திருத்தம் கொண்டு வர தேர்வுக் குழுவுக்கு அனுப்பும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஜூன் 20, 2019: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று, முத்தலாக் முறையை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்ட பின் மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசோதா விவாதத்திற்கு விடப்பட்டது.

ஜூன் 21, 2019: பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட முத்தலாக் சட்ட திருத்த மசோதா சில திருத்தங்களுடன் மக்களவையில் விவாதத்திற்கு விடப்பட்டது.

ஜூன் 25, 2019: 303 உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவையில் முத்தலாக் சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிராக 82 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஜூலை 30, 2019: மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட்1, 2019:குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்டம் அமலுக்குவந்தது.

ஆகஸ்ட் 10, 2019: தன் மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் விவாகரத்து அளித்த டெல்லியைச் சேர்ந்த அதிர் ஷாமின் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் நபர் அதிர் ஷாமி ஆவர்.

அக்டோபர் 4, 2019: தமிழ்நாட்டில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதன்முதலில் ஷேக் அப்துல்லா என்பர் கைது செய்யப்பட்டார்.

முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ள நாடுகள்

முத்தலாக் ஒன்பத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

எகிப்து:

குர்ஆன் விளக்கப்படி, கடந்த 1929ஆம் ஆண்டு விவாகரத்து நடைமுறைகளில் சீர்திருத்தத்தை மேற்கொண்ட முதல் நாடு எகிப்தாகும். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் இப்னு தைமியாவின் விளக்கத்தின்படி, முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது.

பாகிஸ்தான்:

பாகிஸ்தானில் கடந்த 1961ஆம் ஆண்டு முத்தலாக் அளிக்கும் நடைமுறை தடை செய்யப்பட்டது.

துனிசியா:

துனிசிய சட்டப்படி திருமணம் என்பது அரசு மற்றும் நீதித் துறையின் எல்லைக்குட்பட்டது. இதனால் கணவன் ஒருதலைப்பட்சமாக தனது மனைவியை வாய்மொழியாக விவாகரத்து செய்ய முடியாது.

இவை தவிர வங்கதேசம், துருக்கி, இந்தோனேஷியா, ஈராக், அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓராண்டு நிறைவு பெற்ற முத்தலாக் தடை சட்டம்: மத்திய அமைச்சர்கள் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடல்!

ABOUT THE AUTHOR

...view details