இந்தியாவில் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த திங்கள்கிழமை உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
முதல் நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 58,318 பயணிகள் பயணம் செய்ததாகவும் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று, உள்நாட்டு விமான போக்குவரத்து சுமுகமாக நடைபெறுகிறது என்றும் மாலை 5 மணி வரை 608 விமானங்கள் இயங்கப்பட்டுள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன் மூலம் 41,673 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் ஆந்திரா, மேற்கு வங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை முதல் பயணிகள் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று விமானச் சேவை தொடங்கப்பட்டது. அதேபோல மேற்கு வங்கத்தில் நாளை விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.