தமிழ்நாடு

tamil nadu

புதிய கல்விக் கொள்கையில் அடிப்படை இலக்கு இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புதிய தேசிய கல்விக் கொள்கை, வளர்ச்சி மற்றும் அறிவின் விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கை தவறவிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கவர்ச்சிகர வார்த்தைகள், வாய்ஜாலங்கள் நிறைந்துள்ளன, இலக்கை எட்டுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

By

Published : Aug 3, 2020, 8:52 AM IST

Published : Aug 3, 2020, 8:52 AM IST

National Education Policy Congress NEP 2020 Pallam Raju Randeep Singh Surjewala Rajiv Gowda தேசிய கல்விக் கொள்கை பல்லம் ராஜு காங்கிரஸ் தேசிய கல்வி கொள்கை 2020 ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ராஜிவ் கவுடா
National Education Policy Congress NEP 2020 Pallam Raju Randeep Singh Surjewala Rajiv Gowda தேசிய கல்விக் கொள்கை பல்லம் ராஜு காங்கிரஸ் தேசிய கல்வி கொள்கை 2020 ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ராஜிவ் கவுடா

டெல்லி:புதிய தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 தொடர்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ள காங்கிரஸ், புதிய தேசிய கல்விக் கொள்கை மனித வளர்ச்சி மற்றும் அறிவின் விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கை தவறவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) எம்.எம். பல்லம் ராஜு, ராஜிவ் கவுடா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புதிய கல்விக் கொள்கை டிஜிட்டல் பிளவுகளை உருவாக்கும், இதனால் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு கல்வி எட்டாமல் போகும்” என்று தெரிவித்தனர்.

இது குறித்து முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், “இந்தக் கொள்கை எந்தவொரு ஆலோசனையுமின்றி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

அதைச் செயல்படுத்த எந்தத் திட்டமும் இல்லை. இது நாட்டில் டிஜிட்டல் இடைவெளியை உருவாக்கும். மொத்த சேர்க்கை விகிதத்தை 26 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த ஆன்லைன் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி ஆகியவற்றில் என்இபி 2020 முக்கிய கவனம் செலுத்துகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் இது ஏழைகளையும் பின்தங்கியவர்களையும் பிரிக்க வழிவகுக்கும்” என்றார்.

மேலும், கல்விக்கான செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தையும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. “இது 2014 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.14 சதவீதத்திலிருந்து தற்போது மோடி அரசாங்கத்தின் கீழ் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கோவிட்-19ஐ காரணம் காட்டி செலவினத்தை குறைத்தால், கல்வி பயில்வோர் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையக்கூடும்” என்றும் பல்லம் ராஜு எச்சரித்தார்.

ராஜிவ் கவுடா கூறுகையில், “பள்ளி கல்வி குறித்த ஒருங்கிணைந்த மாவட்ட தகவல்களின் தரவுகளின்படி, 9.85% அரசு பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டு கணினி உள்ளது. அதில், 4.09% பள்ளிகளில் இணைய இணைப்பு உள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை ஆன்லைன் கல்வியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது” என்றார்.

இதற்கிடையில், காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், "பள்ளி மற்றும் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழி வகுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, கவர்ச்சிகர சொற்கள், பளபளப்பு, தோற்றம் மற்றும் வாய் ஜாலம் ஆகியவற்றில் உயர்ந்து நிற்கிறது.

ஆனால் இதில் எந்த திட்டமும் இல்லை. தெளிவான வரையறை மற்றும் இலக்கு இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற ஒத்திசைவான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் ஆகியோர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் இடஒதுக்கீடு குறித்து எதுவும் பேசப்படவில்லை.

மேலும் புதிய கல்விக் கொள்கை, தனியார் கல்வியின் மீதான நம்பகத்தன்மையையும், பொது நிறுவனங்களின் மீதான நம்பிக்கை சுருங்குவதையும் காட்டுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவிட்-19 காரணமாக நாடு முடங்கியுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவேண்டியதன் அவசரம் என்ன? ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் திட்டமும் இதில் உள்ளது. கல்விக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் கரோனா பாதிப்பு காரணமாக 40 விழுக்காடு குறைக்கப்பட உள்ளது. இது கல்வியில் பாதிப்பை உண்டாக்கும்” என்றார்.

இதற்கிடையில் கவுடா பேசுகையில், “தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வாக்குறுதிக்கும், நிஜத்துக்கும் இடையே பொருந்தாத நிலை உள்ளது. நாட்டில் மூன்று லட்சத்து 62 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் இல்லை, 1.59 லட்சம் மையங்களில் குடிநீர் கூட இல்லை என்று 2019ஆம் ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன” என்றார்.

மேலும், “தேசிய கல்விக் கொள்கையில், பல்கலைக்கழகங்களின் சுயாட்சி, வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவையும் மீறப்பட்டுள்ளது” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை வெறும் வாய்ஜாலம்: பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருத்து

ABOUT THE AUTHOR

...view details