ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அஞ்சு ராவத். இவர் அப்பகுதியில் உள்ள டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவருகிறார். இந்த மாணவியின் வாழ்வில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவி அஞ்சு, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் வயரில் கைவைத்துள்ளார். இதனால் அவரது இரண்டு கைகளையும் இழக்க நேரிட்டது. எனினும் படிப்பின்மீது மாணவி அஞ்சு அதீத பற்றுக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் தனக்கான தேவைகளை கால்கள் மூலமாகவே பூர்த்தி செய்துகொண்டார்.
படிப்பின் மீதான மாணவியின் ஆர்வத்தைக் கண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் டினா குமார், மாணவியை அம்பேத்கர் பள்ளியில் சேர்த்துள்ளார். ஒன்பதாம் வகுப்பில் அங்கு சேர்க்கப்பட்ட மாணவி அஞ்சுவிற்கு அவரது பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரும் தற்போதுவரை உறுதுணையாக இருந்துவருகின்றனர். மேலும் அவர் எழுதுவதற்கு யாருடைய உதவியையும் நாடாமல் தனது கால்களாலேயே வீட்டுப் பாடங்களையும் செய்வதாகக் கூறினார். தேர்வு சமயங்களில் மட்டும் எழுதுவதற்கு வேரு சிலர் உதவுகின்றனர்.