இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறினர். ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கூலித் தொழிலாளர்களின் பட்டினிச்சாவுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்பவர் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.