மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் உள்ள கின்ஜ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் அகர்வால். இவர் தனக்குச் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு மாலை வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.
இதனிடையே, ஜூன் 14ஆம் தேதி மேய்ச்சலுக்காக சென்ற பசு ஒன்று மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உரிமையாளர் பசுவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜூன் 16ஆம் தேதி பசு இருக்குமிடம் தெரியவந்தது.
இதைக் கண்ட உரிமையாளர், பசுவை அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார். பசுவின் தாடை அறுக்கப்பட்ட நிலையில் நின்றிருந்தது. உணவில் வெடி வைத்து பசுவின் தாடை அறுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்த ஓம் பிரகாஷ், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கால்நடை மருத்துவர்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, பசுவுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். மேலும், பசுவின் உணவில் வெடி வைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.