வளர்ந்து வரும் மனித தேவைகளைக் கருதி, இப்புவி தினம்தினம் மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் பல வழிகளில் முயன்று வருகிறது. புவி வெப்பமாதலைத் தடுக்க பல சூழலியல் இயக்கங்களும் சுழன்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லோயா(45) என்பவர் 18 ஆண்டுகளாக உழைத்து 300 ஏக்கர் அளவிலான காட்டை உருவாக்கியுள்ளார்.
#ForestMan: 300 ஏக்கர் காட்டை உருவாக்கிய தனி ஒருவன்! - லோயா
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லோயா என்னும் நபர் 18 ஆண்டுகள் சொந்தமாக உழைத்து 300 ஏக்கர் காட்டை உருவாக்கி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

முதலில் 2002ஆம் ஆண்டு இந்த யோசனை, இவரைத் தொற்றிக் கொள்ள புன்ஷிலாக் என்ற மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அங்குக் காடுகள் தானியப் பயிர்களுக்காக அழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு வேதனையடைந்துள்ளார். இதனையடுத்து நல்ல ஊதியத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கொஞ்சம் துணி, உணவுப் பொருட்களுடன் காட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். முதலில் தன்னால் முடிந்தளவு மரங்களை நட்ட அவர், 2003ஆம் ஆண்டு நண்பர்கள் உதவியுடன் "Wildlife and Habitat Protection Society" (WAHPS) என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.
தொடர்ந்து தனது அமைப்பினருடன் சேர்ந்து புன்ஷிலாக் மலைப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் இறங்கினார். 18 அண்டுகள் கழித்து தற்போது புன்ஷிலாக் 300 ஏக்கர் நிலப்பரப்பில் செடிகொடிகள், மூலிகைகள், காட்டு விலங்குகளுடன் அடர்வனமாகக் காட்சியளிக்கிறது. இந்த அவசரக் கால மனிதர்களுக்கு மத்தியில் பல்லுயிரின் உயிரோட்டத்தைப் பாதுகாக்க, இவர் மேற்கொண்ட கரடுமுரடான பாதைகள் அனைத்தும் வெற்றிப் பாதைகளே. இவற்றை மனிதர்கள் தத்தமது நினைவில் அசைபோட்டு இப்புவியில் தங்களுக்கான பங்களிப்பை அளிக்க முயற்சிப்போம்.