தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 24, 2020, 10:10 PM IST

ETV Bharat / bharat

கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள் - உக்ரைனில் புதுமையான முறையில் திருமணம்!

எத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத் தானே செய்கிறது எனும் சொல்லாடலுக்கு ஏற்ப, உக்ரைனில் கரோனா ஊரடங்கின் மத்தியில் இரு காதல் மனங்கள், இணையம் வழியாக திருமண பந்தத்தில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள்
கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள்

பொதுவாக ஊர்கூடி, விருந்தளித்து, நண்பர்கள் சொந்தங்கள் வாழ்த்த திருமணங்கள் நடந்தேறும் உலகை, கூட்டம் தவிர்த்து தனி மனித இடைவேளை பேணி திருமணங்கள் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியுள்ளது கரோனா.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து வேறு வேறு ஊர்களைச் சேர்ந்த பல காதலர்கள் பிரிந்து வாழ்ந்தும், நடைபெறவிருந்த பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டும் வரும் நிலையில், இணைய உலகின் அம்சங்களை சாதகமாக்கி, தனி மனித இடைவெளியையும் பொறுப்புணர்வோடு கடைபிடித்து, தங்கள் காதல் திருமணத்தை இந்த உக்ரைனிய ஜோடி வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டில் நடைபெறும் முதல் இணையதள திருமணமான இந்தத் திருமணத்திற்கு, தங்களது விருந்தினர்களுக்கு இனையத்தின் மூலமாகவே இந்த ஜோடி அழைப்பு விடுத்துள்ளது. மொத்தம் 70 விருந்தினர்கள் இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், அனைவரும் காணொளிக் காட்சி வழியாக மணமக்களை வாழ்த்தி, தங்களது பரிசுகளை ஒவ்வொருவரும் தனித்தனியாக காதல் ஜோடியின் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள்

அனைத்து கிறிஸ்துவத் திருமணங்களையும் போல் அழகான திருமண ஆடைகள், ரெஸ்டாரண்டின் அலங்கரிக்கப்பட்ட ஹால்கள், சில கேமராக்கள், ஒரு பெரும் திரை ஆகியவற்றுடன் எந்த விருந்தினரும் நேரடியாக பங்கு பெறாமல் எந்தத் தடையுமின்றி அழகாக திருமணம் நடந்தேறியுள்ளது.

வழக்கம்போல் மோதிரங்கள் மாற்றி, எளிமையாக நடைபெற்ற திருமணத்தில், விருந்தினர்களை உற்சாகமூட்டும் விதமாக இசைக் கச்சேரியும் நடைபெற்றுள்ளது. மேலும் கிறிஸ்துவ திருமணங்களின் ட்ரேட்மார்க் தருணமான திருமணம் ஆகாத பெண்களை நோக்கி மணமகள் பொக்கே எரியும் சடங்குகூட இந்தத் திருமணத்தில் இடம்பெற்றிருந்தது.

திருமணம் அந்நாட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், ஊரடங்கு முடிந்தே தங்கள் திருமண சான்றிதழை மணமக்கள் வாங்க உள்ளனர். உலகை அச்சுறுத்தும் கரோனாவாகவே இருந்தாலும் தங்கள் காதலுக்கு அது ஒரு தடையல்ல என நிரூபித்து, திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து தங்கள் காதலின் ஆழத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது இந்தக் காதல் ஜோடி.

ஆம். எத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத் தானே செய்கிறது!

இதையும் படிங்க:தமிழ் சினிமா கண்ட காதல் கதைகள் - காதலர் தின சிறப்புத் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details