இந்தியாவில் வாழும் பார்சி இன மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புத்தாண்டு தின வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.
பார்சி மொழியில் இவர்களது புத்தாண்டினை நவ்ரோஸ் எனக் குறிப்பிடுவர். நவ் என்ற வார்த்தை புதிய என்ற பொருளையும், ரோஸ் என்ற வார்த்தை நாள் என்ற பொருளையும் கொண்டுள்ளது. அதாவது நவ்ரோஸ் என்பது புதிய தினம் பிறப்பதைக் குறிக்கிறது.
இந்த தினம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “வரும் ஆண்டு மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்கிறேன்.
நவ்ரோஸ் முபாரக்! பார்சி புத்தாண்டு வாழ்த்துக்கள். பரந்த அளவிலான துறைகளில் ஒரு அடையாளத்தை உருவாக்கிய பார்சி சமூகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியா மதிக்கிறது. வரும் ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், “நவ்ரோஸ் முபாரக்! தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் விரிவாக்குவதிலும் பார்சி சமூகத்தின் பங்களிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் மற்றும் பெருமையை அளிக்கிறது. எண்ணங்கள், சொற்கள், செயல்களில் உள்ள நன்மையின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பார்சி சமுதாயத்தின் இந்தத் திருவிழா அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது பதிவில், “பார்சி புத்தாண்டு வாழ்த்துகள். 'நவ்ரோஸின்' நல்ல வேளையில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். இந்தியாவின் கலாச்சாரங்களில் பார்சி சமூகம் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அம்மக்களின் வைராக்கியம், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளது.
கொண்டாட்டங்களின் போது தகுந்த இடைவெளி மற்றும் தனிமனித சுகாதாரத்தைக் கடைப்பிடித்து, பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் ”எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.