தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 29, 2020, 10:31 AM IST

ETV Bharat / bharat

இந்திய-சீன எல்லைத் தகராறு உலகுக்கு அளிக்கும் செய்தி என்ன?

இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் உள்ள தெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, சிக்கிமில் உள்ள நாகு லா ஆகிய பகுதிகளில் இருநாட்டு ராணுவங்களும் மோதல் போக்கில் குவிந்துள்ளன. இந்தச் சூழல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி டி.எஸ். ஹூடாவிடம் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா விரிவான நேர்காணல் மேற்கொண்டார். அதன் தமிழாக்கம் இதோ...

hooda
hooda

கேள்வி: இதற்குமுன் சூமர், டோக்கலாம் ஆகிய பகுதியில் நிலவிய அசாதாரண சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் உள்ள வேறுபாடாக நீங்கள் கருதுவது?

முந்தைய சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் வேறுபாடு உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற டோக்கலாம் விவகாரம் உள் விவகாரமாகவே அரங்கேறியது. டோக்கலாமில் சீனர்கள் சாலை அமைக்க முயன்றபோது இந்தியா பூடான் நாட்டின் எல்லைக்குள் சென்று சாலை அமைக்க வேண்டாம் என அந்நாட்டிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. சூமரிலும் இதேதான் நடந்தது. அவர்கள் சாலை அமைக்க வந்தவுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் வெளியே பரவாமல் உள்விவகாரமாகவே தடுத்துநிறுத்தப்பட்டது. இரு நாடுகளின் தேவையும் அப்போது தெளிவாக வரையறுக்கப்பட்டன.

ஆனால் இம்முறை இது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இம்முறை வரலாற்றிலேயே இல்லாததுபோல் புதிய பகுதிகளில் பூசல் நிலவிவருகிறது. உதாரணமாக கல்வான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் இதுவரை எந்த விவகாரமும் தோன்றியதில்லை. இம்முறை, மிக அதிகமான ராணுவத்தினரைக் குவித்து ஒருங்கிணைந்த முறையில் தனது நகர்வுகளைச் சீனா மேற்கொள்கிறது. இதில் முக்கியக் கேள்வி என்னவென்றால், சீனாவின் தேவை என்ன என்பதாகும். இதுவரை அவர்கள் தங்களின் தேவை என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.

கேள்வி: இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, ஹாங்காங், தைவான் போன்ற விவகாரங்களைக் கொண்டு சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம் தர முயலுகிறதா?

அனைத்து நிகழ்விலும் பூகோள அரசியல் தொடர்பு இருப்பது இயல்பானது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு கடும் அழுத்தம் உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்கா - சீனா இடையே பனிப்போர் நிலவிவருகிறது. இதன் காரணமாக சீனா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தென்சீனக் கடல்பகுதியில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஹாங்காங், தைவான் ஆகிய பகுதிகளிலும் சீனா பல்வேறு அழுத்தத்தை தருகிறது. கரோனா தீநுண்மி காரணமாக நாங்கள் பலவீனமாகிவிட்டோம் எனக் கருத வேண்டம் எனச் சீனா தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பை பொறுத்தவரை அவரது பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இந்த விவகாரம் மூன்றாம் நபரின் தேவையில்லாமல் இரு நாடுகளே பேசித் தீர்த்துக்கொள்ளும்.

கேள்வி: சீனாவின் பி.ஆர்.ஐ. (சர்வதேச நாடுகளை இணைக்கும் மாபெரும் சாலைத்திட்டம்) திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியா - அமெரிக்கா கூட்டணியை சீனா எவ்வாறு பார்க்கும்?

உலக அரசியலைப் பொறுத்தவரை அனைத்து விவகாரங்களும் பங்காற்றும். இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து, சீனாவுக்கு எதிர்த்தரப்பில் நிற்கக் கூடாது என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா பலமான கடற்படையைக் கொண்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் இணையும்பட்சத்தில், தான் பலவீனம் அடையப் போவதாகச் சீனா கருதுகிறது. சீனாவின் 80 விழுக்காடு வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சார்ந்தே உள்ளது. இதுபோன்ற அம்சங்களின் பின்னணியில்தான் சீனா, இருநாட்டு எல்லைப்பகுதியான லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

முன்னாள் ராணுவத் தளபதி பி.எஸ். ஹூடா நேர்காணல்

கேள்வி: எல்லைப் பகுதியான லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதியில் இந்தியாவின் கட்டமைப்பு எந்த அளவிற்கு பலமாக உள்ளது?

சீனாவின் கட்டமைப்பு வசதி மேம்பட்டதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேவேளை, இந்தியாவும் சில ஆண்டுகளாக மிகவும் துரிதமான கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. சாலைகள், பாலங்கள், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. 1967ஆம் ஆண்டு நாது லா பகுதி பூசல் தொடங்கி தற்போதுவரை சீனாவின் எந்த நடவடிக்கைகளும் வெற்றிபெறவில்லை. எனவே, சீனா தனது யுக்திகளை மாற்றிவருகிறது.

கேள்வி: சீனா சர்வதேச நாடுகளின் பலமான எதிர்ப்பை தற்போது சந்தித்துவரும் நிலையில், இந்தியாவிடம் தற்போது சீனா மேற்கொள்ளும் மோதல்போக்கை எவ்வாறு பார்க்க வேண்டும்?

சீனா பலம்வாய்ந்த நாடாகும். இதுபோன்ற பலம்வாய்ந்த நாடு அண்டை நாடாக இருப்பதே அழுத்தமான ஒன்று. இந்தியாவும் பலம்வாய்ந்த நாடாக வளர்ந்துள்ளது. எனவே, பூகோள அரசியலில் இருபெரும் நாடுகள் அருகருகே இருக்கையில் அமைதி என்பது கடினமான அம்சமாகும். எனவே, இந்தியா - சீனா இடையே இதுபோன்ற பூசல் இருந்துகொண்டே இருக்கும்.

கேள்வி: இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து உங்கள் பார்வை?

சீனாவுடன் பாகிஸ்தானுக்கு உள்ள நெருக்கமான தொடர்பு நாம் அறிந்த ஒன்றே. மேற்குப் பகுதியில் உள்ள எல்லைச் சிக்கலை பாகிஸ்தான் மூலமாகச் சீனா தொடர்ச்சியாக உருவாக்கிவருகிறது. இருநாடுகளும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன. சீனா மட்டுமல்ல லடாக் விவகாரத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் தோண்ட முயற்சிக்கும். எனவே, இரு நாடுகளையும் இந்தியா கூர்மையாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்.

கேள்வி: தற்போதைய சிக்கல் நீண்ட காலத்திற்குத் தொடருமா, இது எங்குபோய் நிற்கும் என நினைக்கிறீர்கள்?

இருநாட்டு ராஜரீக உறவு விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சூழலில் இரு நாடுகளும் ராணுவத் தலைமை மூலம் மட்டுமே விவாதிக்கக் கூடாது. எனவே, ராஜரீக முறையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவை எட்ட வேண்டும். இதை அவசர கதியில் செயல்படுத்த முடியாது என்பது எனது கருத்து. சீனாவின் தேவை என்ன என்பதை இதுவரை நமக்கு விளங்கவில்லை. எனவே பதில் கிடைக்காத பல கேள்விகள் தற்போது நம்முன் உள்ளன. எனவே, தெளிவாக ராஜாங்க முறையில் பேச்சுவார்த்தை நடத்தும்பட்சத்தில் இந்த விவகாரம் பாதுகாப்பான முறையில் முடிவுக்கு வரும்.

இதையும் படிங்க:பினராயி 75: இந்திய இடதுசாரி அதிகார அரசியலின் ஒரே ஆயுதமான 'பிரியப்பட்ட சகாவு'

ABOUT THE AUTHOR

...view details