கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவன் ஹான்காக் (61) அவரது மனைவி அன்னே வில்லியம் (61), ஜேனட் லே (83), ஜேன் எலிசபெத் ஜாக்சன் (63) ஆகியோர் கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இச்சூழலில் அவர்கள் கரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னர் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மருத்துவமனைகளில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்டோ டோனோசோ (57), இங்கிலாந்து நாட்டவர்களான லான்சன் (76) எலிசபெத் லான்ஸ் (76), பிரையன் நீல் (57) ஆகியோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்திருந்தனர். அவர்களில், பிரையன் நீல் மார்ச் மாதம் 15-ஆம் தேதி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டார். அதன் பின் அவர் கொச்சியில் இருக்கும் கலமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் அவருக்கு எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது. அது அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கியமாக உதவியதாக கூறப்படுகிறது. மேலும், குணமடைந்த வெளிநாட்டவர்கள் கொச்சியில் உள்ள போல்கட்டி தங்கு விடுதியில் கண்காணிக்கப்பட்டனர். கண்காணிப்புக் காலத்திற்குப் பிறகு நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.