தங்க கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் சுங்கத் துறை அலுவலர்கள் இன்று என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு சரக்கு வந்தது. சுங்கத்துறை அலுவலர்கள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால், அதனை பயன்படுத்தி தங்கக் கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது.
இந்தக் கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அலுவலராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது. தங்கக் கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், கண்ணீர் மல்க பேசும் ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.