தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 6:09 PM IST

Updated : May 24, 2020, 7:57 PM IST

ETV Bharat / bharat

பினராயி 75: இந்திய இடதுசாரி அதிகார அரசியலின் ஒரே ஆயுதமான 'பிரியப்பட்ட சகாவு'

மார்க்ஸின் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும் பிரியப்பட்ட சகாவு பினராயி விஜயன் இன்று தனது 75ஆவது வயதில் ஆர்ப்பாட்டமில்லாமல் காலத்தின் வாழ்த்துகளுடன் அடியெடுத்து வைக்கிறார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

சகாவு... கேரள இடதுசாரிகள் தங்கள் சக சித்தாந்த தோழர்களை அன்போடு அழைக்கும் சொல் இது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள், காலம் செல்ல செல்ல தங்கள் பலத்தை இழந்து, இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளாவில் மட்டும்தான் தற்போது ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ளன.

இந்தியாவில் கம்யூனிச கனவை உயிர்ப்போடு நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை கொண்ட கேரள முதலமைச்சரும், அங்குள்ள மக்களால் பிரியப்பட்ட சகாவு என அழைக்கப்படும் தோழர் பினராயி விஜயன்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பிடமாகவும், கோட்டையாகக் கருதப்படும் கேரளாவில் உள்ள பினராயி என்ற ஊரில் பிறந்த விஜயன், தனது கல்லூரி காலத்திலேயே இடதுசாரி அமைப்பில் தன்னை இனைத்துக் கொண்டு தீவிர செயல்பாட்டாளராக விளங்கினார். 1970ஆம் ஆண்டு கூத்துபரம்பு என்ற தொகுதியில் வெற்றிபெற்று 26 வயதில் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார் விஜயன்.

1996ஆம் ஆண்டு மின்சாரத்துறை அமைச்சாரகப் பொறுப்பேற்ற விஜயனுக்கு, 1998ஆம் ஆண்டுதான் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. அந்தாண்டில் கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த சடையன் கோவிந்தன் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக மறைந்தார். கோவிந்தனின் மறைவுக்குப்பின் மாநில செயலாளராக பொறுப்பேற்ற விஜயன், 1998ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்தார். இதன் மூலம், அதிக ஆண்டுகள் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் விஜயன்.

2006ஆம் ஆண்டு கேரளவில் மார்க்சிஸ்ட் ஆட்சியைப் பிடித்தபோது முதலமைச்சர் பொறுப்பு பினராயி விஜயனுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால், வயதிலும் அனுபவத்திலும் மூத்த தலைவரான அச்சுதானந்தனைத் தேர்ந்தெடுத்தது கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத் தலைமையாகக் கருதப்படும் பொலிட் பீரோ எனப்படும் அரசியல் உயர்நிலைக்குழு.

2016ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இம்முறை, பொலிட் பீரோ அமைப்பு பினராயி விஜயனையே கேரளாவின் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது.

முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நாற்காலியில் அமர்ந்த நாளில் இருந்தே பினராயி விஜயனுக்கு ஆண்டுதோறும் அடுக்கடுக்கான சவால்கள் வந்துகொண்டே இருந்தன. ஒக்கி புயல், தீவிரப் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம், நிபா.. கரோனா... போன்ற நோய்த் தொற்று என தொடர்ச்சியான சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு திறம்பட கையாண்டார் விஜயன்.

கரோனா பொருந்தொற்றை சமாளிக்க உலகமே திணறிவரும் நிலையில், இந்த பெருந்தொற்றை கேரளா கையாண்ட விதம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே கரோனா தொற்று கேரளாவுக்கு நுழைந்தாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார அமைச்சரின் கீழ் இயங்கும் பொறுப்பான நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் காரணமாக பெருந்தொற்றை கேரளா கட்டுக்குள் வைத்துள்ளது. கரோனா தடுப்புக்கு கேரளாவின் மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பல நிபுணர்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசை பாராட்டிவருகின்றனர்.

மக்களாட்சி எனப்படும் ஜனநாயக முறையில் இடதுசாரிகள் முதன்முறையாக ஆட்சியமைத்தது கேரளாவில்தான். 1957ஆம் ஆண்டு இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் புதிதாக உருவான கேரளா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

"நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, உங்கள் அடிமை சங்கிலியைத் தவிர..." இந்த வரிகள், உழைக்கும் தோழர்களைப் பார்த்து இடதுசாரி கொள்கையின் பிதாமகரான மார்க்ஸ் அன்று சொன்னது.

"இன்று கேரளா மட்டும்தான் உள்ளது... உங்கள் கம்யூனிச கனவை நிறைவேற்றும் களமாக.." இந்திய இடதுசாரிகளைப் பார்த்து இன்று காலம் இவ்வாறு சொல்கிறது.

மார்க்ஸின் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும் பிரியப்பட்ட சகாவு பினராயி விஜயன் இன்று தனது 75ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்... ஆர்ப்பாட்டமில்லாமல் காலத்தின் வாழ்த்துகளுடன்.

இதையும் படிங்க:'நிழலில் இருந்து நிஜ அதிகாரத்திற்கு...' - மராட்டியத்தைப் புரட்டிய தாக்கரே அரசியலின் கதை

Last Updated : May 24, 2020, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details