தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக பதவி வகித்த சாருமதி, 2019 மே 31ஆம் தேதி அன்று பணி ஓய்வுபெற்றார். அதன்பின், நிரப்பப்படாமல் இருந்த அந்த பொறுப்பிற்கு பூர்ணசந்திரன் நியமிக்கப்படுவதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி திருவாரூர் திரு.வி.க அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கல்லூரி கல்வி இயக்குநராக உள்ளவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் பதவிக்கான தகுதியானவர்கள் பட்டியலை தயாரித்து இருக்க வேண்டும். ஆனால், பூர்ண சந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும், பூர்ண சந்திரனை விட சீனியரான தன்னை கல்லூரி கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும். அவரை நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.