எளிய மக்களை கவர்வது என்பது சுலபமான செயல் அல்ல. சினிமா துறையில் இருந்தாலும் கூட அதற்கு சில தடைகள் உண்டு. அதனை எல்லாம் உடைத்தெறிந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் என சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், 2014ஆம் ஆண்டு நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், ரஜினிகாந்த் இவரது காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இந்த ஒரு சம்பவம் இவரின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்கும். 1969ஆம் ஆண்டு வெளியான சாத் இந்துஸ்தானி என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் தொடக்க காலத்தில், சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர், பார்வானா படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஆனந்த் என்ற படத்தில் மருத்துவர் வேடத்தில் கச்சிதமாக பொருந்திய இவர், பாம்பே டு கோவா படத்தில் ஹீரோவாக கலக்கி இருப்பார். இந்திய சினமாவில் இவர் அளவுக்கு ஸ்கிரீன் பிரசன்ஸ் யாருக்கும் இல்லை என்றுகூட சொல்வதுண்டு. திரையில் கோபமுள்ள இளைஞராக தோன்றி உரத்த குரலில் இவர் பேசும் வசனங்களால் திரையரங்குகள் அதிர்ந்தன. சான்ஜீர், தீவார், திருஸுல், சோலே போன்ற படங்கள் இந்திய ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
கோபமாக மட்டும்தான் இவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தபோது, அமர் அக்பர் அந்தோனி என்ற படத்தில் திரையரங்கையே சிரிப்பலையில் மூழ்கவைத்திருப்பார். இப்படி மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வந்த இவர், கபி கபி என்ற காதல் படம் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக உருவெடுத்தார். அந்த காலகட்டத்தில் இந்தி சினிமாவின் முதல் பத்து இடங்களுமே இவருக்கு மட்டும்தான் சொந்தம். எந்த அளவுக்கு எளிய மக்களை கவர்கிறோமா அந்த அளவுக்கு சினிமாவில் நிலைத்து இருக்கலாம், இதனை மிகச் சரியாக அமிதாப் கையாண்டார். மக்களுக்கு ஆதரவான எளிய கதாபாத்திரங்களில் தோன்றி சக்திவாய்ந்தவர்களுக்கு எதிராக போராடும் துடிப்பு மிக்க இளைஞராக பல படங்களில் நடித்து ஐம்பது ஆண்டு காலம் இந்தி சினிமாவை தன்னை சுற்றி சூழலவைத்துள்ளார். நடிப்பு, பாடல், நடனம் என அனைத்திலும் கலக்கும் இவரை 70களின் தாத்தகளிலிருந்து, இப்போதுள்ள சிறுவர்கள் வரை அனைவரும் ரசிக்கின்றனர்.